Shahbaz Sharif : பாகிஸ்தான் பிரதமரின் நட்பு நாடுகள் லிஸ்ட்.. உற்று கவனிக்கும் இந்தியா!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்களுக்குப் பின்னர், இந்த நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணங்களை இந்தியா உற்று நோக்குகிறது,

பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தற்போது நான்கு நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துர்கியேவுக்குப் பிறகு, ஷாபாஸ் ஷெரீப் ஈரானுக்கு விஜயம் செய்தார், பின்னர் செவ்வாய்க்கிழமை அவர் அஜர்பைஜானை அடைந்தார். இதன் பிறகு அவர் தஜிகிஸ்தான் செல்வார். மூன்று இடங்களிலும் அவர் ஒரே மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் இந்த நாடுகளின் தலைவர்களை சகோதரர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான சமீபத்திய பதட்டத்தில் இந்த நாடுகள் பாகிஸ்தானுடன் இருந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதனால் பாகிஸ்தான் பிரதமரின் இந்த பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானை அம்பலப்படுத்தவும் ஆதரவைப் பெறவும் இந்தியக் குழுக்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கின்றன. இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் நான்கு ‘நட்பு நாடுகளுக்கு’ நன்றி தெரிவிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அஜர்பைஜான் விசிட்
2025 மே 27ம் தேதியான நேற்று ஈரானுக்குப் பிறகு ஷாபாஸ் ஷெரீப் அஜர்பைஜானை அடைந்தார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவை சந்தித்த பிறகு, சந்திப்பு குறித்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அதில், “எனது அன்பு சகோதரர் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை இன்று அழகான மற்றும் அமைதியான நகரமான லாச்சினில் சந்தித்ததில் நான் பெருமைப்படுகிறேன். சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலில் பாகிஸ்தானுக்கு அஜர்பைஜான் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான்-அஜர்பைஜான் உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றவும் ஆலோசித்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.”
மேலும் “இந்த சகோதரத்துவத்தின் முன்மாதிரியான உணர்வு, நம் மக்களிடையே உள்ள அன்பு மற்றும் பாசத்தால் ஈர்க்கப்படுகிறது, பாகிஸ்தான் அஜர்பைஜான் நட்பு என்றென்றும் வாழட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக, ஈரான் மற்றும் துருக்கியை சகோதரன் என்று கூறியது பாகிஸ்தான்.
இதற்கு முன்பு, ஷாபாஸ் ஷெரீப் துருக்கியையும் ஈரானையும் அடைந்திருந்தார். துர்கியேயில் எர்டோகனைச் சந்தித்த பிறகும் அவர் இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார். இதன் பின்னர் அவர் ஈரானில் ஜனாதிபதி பெஷேஷ்கியனையும் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியையும் சந்தித்தார்.
தஜிகிஸ்தான் கடைசி
அஜர்பைஜானுக்குப் பிறகு, ஷாபாஸ் ஷெரீப்பின் அடுத்த பயணம் தஜிகிஸ்தான் ஆகும். சில அறிக்கைகளின்படி, இந்தியாவுக்கு எதிராக தஜிகிஸ்தான் பாகிஸ்தானுடன் நின்றுள்ளது. மே 29-30 தேதிகளில் தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெறும் சர்வதேச பனிப்பாறைகள் மாநாட்டிலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமரின் பயணங்களையும், பாகிஸ்தானின் சமீபத்திய நட்பு நாடுகளையும் இந்தியா தீவிரமாகவே கவனித்து வருகிறது. குறிப்பாக சமீபத்திய பதட்டத்துக்கு பிறகு பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா கவனிப்பது குறிப்பிடத்தக்கது