மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர கண்காணிப்பு அமைப்புகள், ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் ஏவுதளங்கள் உள்ளிட்ட பல இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 8, 2026: ஈரான், அமெரிக்காவின் வளைகுடா பிராந்திய ராணுவத் தளங்கள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானுடனான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இடைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை” என்று கூறினார்.
அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்:
ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கையின்படி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை 5-வது படைத் தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அலி அல் சாலம் விமானப்படை தளம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும் படிக்க: கூட்டல் செய்தால் 8 வரும்.. இந்தோனேசியாவில் 8ம் நம்பரை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி… ஏன் தெரியுமா?
இதையடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. எனினும், இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ராணுவம் உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
ஈரான் மீது அமெரிக்காவின் பதிலடி:
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர கண்காணிப்பு அமைப்புகள், ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் ஏவுதளங்கள் உள்ளிட்ட பல இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்:
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, போர் நிறுத்தத்தை ஈரான் மீறியுள்ள நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கை அவசியமானது என்று தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காயா கல்லாஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை கண்டித்துள்ளார்.
ஈரான் கொடுத்த எச்சரிக்கை:
அமெரிக்காவின் தாக்குதலை “வெளிப்படையான ஆக்கிரமிப்பு” என கண்டித்துள்ள ஈரான், அதற்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ஈரானின் கார்க் தீவு, கேஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்துள்ள இந்த பதற்றம், உலக அரசியல் மற்றும் சர்வதேச எண்ணெய் சந்தையில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.