ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா நியமனம்.. டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

Mojtaba Named Iran's New Supreme Leader: மொஜ்தபாவின் நியமனம் டிரம்பின் கோபத்தைத் தூண்டும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார். "எங்களிடமிருந்து அங்கீகாரம் பெறவில்லை என்றால், புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை" என்று எச்சரித்திருந்தார்.

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா நியமனம்.. டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா நியமனம்

Updated On: 

09 Mar 2026 08:12 AM

 IST

ஈரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும்  இடையேயான மோதல் தொடங்கி ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனிக்கு அடுத்தபடியாக அவரது மகன் மொஜ்தபா கமேனியை புதிய உச்ச தலைவராக ஈரான் நியமித்துள்ளது. இதன் மூலம் தெஹ்ரானில் கடும்போக்காளர்களின் கைகளே இன்னும் ஓங்கியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அலி கமேனிக்குப் பிறகு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட 88 மதகுருமார்கள் அடங்கிய ‘நிபுணர்கள் குழுவின்’ வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, ஈரானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் தனது தந்தையின் கீழ் உள்ள மிகப்பெரிய வணிக நெட்வொர்க்குகளில் செல்வாக்கு பெற்றுள்ள மொஜ்தபா, இந்தப் பதவிக்கான முன்னணியில் இருப்பவராகக் கருதப்பட்டார்.

இதையும் படிக்க: “அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம்”.. மன்னிப்பு கேட்ட ஈரான்

மொஜ்தபாவிற்கே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்:

“நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையான வாக்கெடுப்பின் மூலம், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புனித அமைப்பின் மூன்றாவது தலைவராக அயதுல்லா செய்யது மொஜ்தபா ஹொசைனி கமேனி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெஹ்ரான் நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தின் மூலம் ஈரானின் அனைத்து அரசு விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மொஜ்தபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கோபத்தில் டிரம்ப், குறிவைக்கும் இஸ்ரேல்:

மொஜ்தபாவின் இந்த நியமனம் அமெரிக்க அதிபர் டிரம்பின் கோபத்தைத் தூண்டும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வில் வாஷிங்டனுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார். “எங்களிடமிருந்து ஈரான் அங்கீகாரம் பெறவில்லை என்றால், புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை” என்று எச்சரித்திருந்தார். முன்னதாக, யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களைக் குறிவைப்போம் என்று இஸ்ரேலும் மிரட்டல் விடுத்திருந்தது.

அமெரிக்க வீரர்கள் 7 பேர் பலி:

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனி, ஒரு வாரத்திற்கு முன்பு ஈரான் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்த ஏழாவது அமெரிக்க வீரர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக உயிரிழந்த ஆறு பேரின் உடல்களுக்கு அதிபர் டிரம்ப் மரியாதை செலுத்திய மறுநாளே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் குறைந்தது 1,332 ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநாவுக்கான ஈரானிய தூதர் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த விரும்பவில்லை:

டிரம்ப் “நிபந்தனையற்ற சரணடைதலுக்கு” அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், தெஹ்ரான் போரை நிறுத்த விரும்பவில்லை என்றும் ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஈரானின் மூத்த தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. உச்ச தலைவரின் ராணுவ அலுவலகத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அபுல்காசெம் பாபயன் (Abolqasem Babaian) சனிக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்:

அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை ஒன்பதாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் தெஹ்ரான் நகரின் வானம் கரும்புகையால் சூழப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். எரிபொருள் கிடங்குகளைக் குறிவைப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் நச்சுப் பொருட்களைக் காற்றில் பரப்புகிறார்கள் என்றும், இது ஒரு போர்க்குற்றம் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஈரான் போர் எதிரொலி: உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஆட்டம் காணும் அமெரிக்கப் பங்குச்சந்தை

ஆனால், அந்த கிடங்குகள் ஏவுகணை தயாரிப்பு மற்றும் போர் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதால் அவை சட்டபூர்வமான ராணுவ இலக்குகளே என்று இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி கூறினார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஈரானிய ஆட்சியாளர்களை “இரக்கமின்றி” தாக்குவோம் என்றும், ஆட்சியை சீர்குலைக்க பல ஆச்சரியமான திட்டங்களை வைத்துள்ளோம் என்றும் கூறினார்.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு