‘மன்னிப்பு கேட்கணுமா? நிறுத்திக்கோங்க’ விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த வேல்முருகன்!
Velmurugan Controversy on TVK Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து, தமிழக வாழ்வுரிமை கழக தலைவர் வேல்முருகன் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து தற்போது வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். தான் விஜய் குறித்து பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

சென்னை, ஜூன் 05 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Tamizhaga vettri kazhagam Chief Vijay) குறித்து, தமிழக வாழ்வுரிமை கழக தலைவர் வேல்முருகன் (MLA velmurugan) பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வேல்முருகன் விஜய் குறித்து பேசி இருக்கிறார். நடிகரும், தமிழக வெற்றிக் கழக தவைருமான விஜய் கல்வி விருது விழா நடத்தி வருகிறார். 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவிகளை சந்தித்து கல்வி விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விஜய் மாணவர் சந்திப்பு குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, விஜய்யிடம் மாணவர்கள் அரவணைத்து புகைப்படம் எடுத்து கொள்வது தொடர்பாக வேல்முருகன் மோசமாக பேசியிருக்கிறார்.
விஜய் குறித்து சர்ச்சை பேச்சு
அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அநாகரீகமாக பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் கண்டம் தெரிவித்தனர். வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், கடலூரில் 2025 ஜூன் 5ஆம் தேதியான இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வேல்முருகன் இதுகுறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது வரவேற்றவன் நான். ஆனால், வந்தவுடன் சட்டமன்றத்திற்கு தான் செல்வேன் என கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. 10 ஆண்டுகள் இந்த மண்ணில் அவர் போராட வேண்டும். இளமை காலத்தில் இருந்து திரைத்துறையில் நடித்துவிட்டு, அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.
‘மன்னிப்பு கேட்கணுமா? நிறுத்திக்கோங்க’
ஆனால், வந்தவுடன் நேராக செயின் ஜார்ஜ் கோட்டைக்கு தான் போவோம் என்று கூறி இருக்கிறார். பெற்றோர் தங்களின் குழந்தைகளை சினிமாக்காரர்களுடன் அதிக நெருக்கம் காட்ட அனுமதிக்க கூடாது என்று கூறினேன். மேலும், வாழும் காமராஜர் என்றும் வருங்கால காமராஜர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். காமராஜர் மாபெரும் தலைவர்.
அவரோடு ஒரு வருடத்திற்கு முன்பு வந்த விஜயோடு ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல. காமராஜரின் ஒழுக்கம், பண்பு, நேர்மை போன்றவை துளியும் அவருக்கு இல்லை. நடிகருக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்து, பெற்றோருக்கு சேவை செய்யுங்கள்.
சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது உரையை முழுமையாக கேட்காமல், சில அரைகுறை வேட்காடுகள் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள். இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாகரீத்துடன் சொல்லுகிறேன். மற்றவர்களை வைத்து வீடியோ போட்டு பேச வைப்பது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.