பள்ளியில் அருகே அமர்வதில் தகராறு… 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு – திருநெல்வேலியில் பரபரப்பு
Student Clash in School : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் 2 மாணவர்களை அரிவாளால் தாக்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அருகே அமர்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகளில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தமிழக அரசு பள்ளிகளில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுப்புகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி (Tirunelveli)மாவட்டம் வள்ளியூரில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் செப்டம்பர் 25, 2025 அன்று 2 மாணவர்களை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வகுப்பறையில் அருகே அமர்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த மோதல் சம்பவம் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
அருகே அமர்வதில் ஏற்பட்ட பிரச்னை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் செப்டம்பர் 25, 2025 அன்று மாணவர்கள் அருகருகே அமர்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு தரப்பினரிடைேய பெரிய தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு மாணவர் தான் கொண்டு வந்திருந்த புத்தகப் பையில் இருந்த அரிவாளை எடுத்து ஒரு மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற மற்றொரு மாணவரின் கையிலும் அரிவாள் பட்டு விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த மாணவர்கள் உடனே அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : வேறுநபருடன் தொடர்பு.. திருப்பூரில் வடமாநில பெண் கொலை




மாணவர் சகஜமாக பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்து 2 மாணவர்களை வெட்டியிருக்கிறார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வள்ளியூர் காவல்துறையினர், பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரிவாள் கொண்டு வந்திருந்த மாணவரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
பென்சில் தகராறில் மாணவருக்கு அரிவாள் வெட்டு
சில மாதங்களுக்கு முன் திருநெல்வெலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் தாக்கியுள்ளார். பென்சில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் விசாரணையயில் தெரியவந்துள்ளது. ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மோதலை தடுக்க வந்த ஆசிரியரின் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : குழந்தை திருமணம்.. ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது!
பள்ளியிலேயே மாணவர்கள் அரிவாள் எடுத்து வரும் சம்பவங்கள் மக்களிடையே அதிகரித்து வருவது மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது, ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருக்கின்றன. அரசு தலையிட்டு மாணவர்களுக்கு இதன் விளைவுகள் குறித்து அறிவுறுத்த வேண்டும் எனவும் இதற்காக மாணவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.