சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கிய இரு சிறுமிகள்.. கண்ணில் தெரிந்த அசைவு.. அடுத்து நேர்ந்த துயரம்!
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமரபரணி ஆற்றில் மூழகிய இரு சிறுமிகள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் சுற்றுலா வந்த இடத்தில் இந்த துயரம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் பலி
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரகுமார். இவர், தனது குடும்பத்தினருடன் மாசி திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அவர்கள், கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அந்த பகுதியில் செல்லும் தாமிரபரணி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்துள்ளனர். அப்போது, சங்கர குமாரின் மகள்கள் அபிநயா ( 16 வயது), மீனாட்சி (12 வயது) உள்ளிட்ட 4 சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, நீச்சல் தெரியாத அந்த சிறுமிகள் ஆற்றில் மூழ்க தொடங்கினர். இதனால் அச்சமடைந்த சிறுமிகள் சத்தமிட்டனர். அப்போது, கரையில் நின்று கொண்டிருந்த சந்திரகுமார் சிறுமிகளை மீட்பதற்காக ஆற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது, அவரும் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இரு சிறுமிகள் உள்பட மூவர் மீட்பு
இவர்களது சத்தம் கேட்டு அருகில் குளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் நீச்சல் அடித்து சென்று சிறுமிகள் மற்றும் சந்திரகுமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில், இரு சிறுமிகள் மற்றும் சந்திரகுமாரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால், அபிநயா மற்றும் மீனாட்சி ஆகியோரை மீட்க முடியவில்லை. பின்னர், இது குறித்து ஏரல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், ஏரல் காவல் ஆய்வாளர் மற்றும் ஏரல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்… சம்பவ இடத்தில் போலீசாரை நிறுத்தி சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கண்ணில் தென்பட்ட அசைவு
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் சிறுமிகளை தேடினர். பின்னர், அபிநயா மற்றும் மீனாட்சியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது, அந்த சிறுமிகளின் கண்ணில் சிறிது அசைவு தெரிந்ததாக கூறப்படுகிறது. உடனே, அந்த இரு சிறுமிகளையும் அவரது பெற்றோர் மீட்டு அவசர ஊர்தி மூலம் ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமிகளையும் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர். இதில், ஏற்கனவே இரு சிறுமிகளும் உயிரிழந்தது தெரிய வந்தது.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இதைத் தொடர்ந்து, இரு சிறுமிகளின் சடலங்களும் உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இது தொடர்பாக சந்திரகுமார் அளித்த புகாரின் பேரில், ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர்கள் கண் முன்னே இரு சிறுமிகள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!