கோடை விடுமுறை ஓவர்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு

TNSTC Special Buses : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 2025 ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்புகின்றனர். இதனையொட்டி, மாநிலம் முழுவதும் 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை ஓவர்..  சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சிறப்பு பேருந்துகள்

Published: 

29 May 2025 07:40 AM

சென்னை, மே 28 : பள்ளிகளுக்கான கோடை விடுமுறை (tamil nadu summer holidays) முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு பேருந்துகளை (TNSTC Special buses) இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் மாதம் மத்தியில் தொடங்கியது. கிட்டதட்ட 55 நாட்களுக்கு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து, திட்டமிடப்பட்டி ஜூன் 2ஆம் தேதி திங்கள் கிழமை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

முடிந்தது கோடை விடுமுறை

கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் சுலபமாக சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில், போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, 2025 மே 30, 31, ஜூன் 1ஆம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற முக்கிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்


2025 மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் 570 சிறப்பு பேருந்துகளும், 2025 மே 31ஆம் தேதி சனிக்கிழமை அன்று 605 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

2025 மே 30ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 100 சிறப்பு பேருந்துகளும், 2025 மே 31ஆம் தேதி 90 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2025 மே 30,31ஆம் தேதிகளில் 24 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுமார் 250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2025 ஜூன் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, பெங்களூரு மற்றும் பிற நகரங்களுக்கு பயணிகள் திரும்புவதை எளிதாக்கும் வகையில், 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுவரை 2025 மே 30ஆம் தேதிக்கு 8,119 பயணிகளும், மே 31ஆம் தேதிக்கு 7,304 பயணிகளும், ஜூன் 1ஆம் தேதிக்கு 10,523 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் TNSTC செயலி அல்லது  https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளம் மூலம் உங்கள் பயண முன்பதிவை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.