திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..

DMK - Congress Seat sharing: உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதை திமுக சுட்டிக்காட்டும் நிலையில், காங்கிரஸ் தரப்பு ஆட்சியில் அதிகாரம் கோரிக்கையை கைவிட்டதாகவும், அதிக இடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

27 Feb 2026 06:53 AM

 IST

சென்னை, பிப்ரவரி 27: திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆட்சியில் அதிகாரம் கோரிக்கையை திமுக திட்டவட்டமாக மறுத்த நிலையில், அதிக இடங்கள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, திமுகவுடன் இன்னும் நேரடி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி, சமீபத்தில் அக்கட்சியில் தேர்தல் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 27+1 தர திமுக முன்வந்ததாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க: நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்தவகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் புதிதாக அக்கூட்டணியில் இணைந்துள்ளதால், கூட்டணி கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட தற்போது குறைவான தொகுதிகளை பெற்றுக் கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் – திமுக இடையே நீடிக்கும் இழுபறி:

இதைத்தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை 35 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்க உள்ள நிலையில், அதில் இரண்டு இடங்களை காங்கிரஸ் கேட்பதாக கூறப்படுகிறது. அதோடு, உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதை திமுக சுட்டிக்காட்டும் நிலையில், காங்கிரஸ் தரப்பு ஆட்சியில் அதிகாரம் கோரிக்கையை கைவிட்டதாகவும், அதிக இடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு 27+1 ஒதுக்க முடிவு?

இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சீட் எண்ணிக்கை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு 27 சட்டசபை தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் தர திமுக உறுதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான இத்தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!

மாநிலங்களவை சீட்டை உறுதி செய்த காங்கிரஸ்:

இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சிக்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டிருப்பதை செல்வப்பெருந்தகை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும், இந்தக் கூட்டணி வலிமையாகத் தொடரும் எனவும் கூறினார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் இன்னும் ஓரிரு நாளில் தங்களுடைய வேட்பாளர், வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தவெகவுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.

Follow Us
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?