நெல்லை: யார் அதிக சத்து மாத்திரை சாப்பிடுவார் என பார்க்கலாம்..? மாணவர்களுக்குள்ளே விபரீத போட்டி… 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
Tirunelveli Students Hospitalized: திருநெல்வேலி களக்காடு அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவர்கள், சத்து மாத்திரை விளையாட்டு விளையாடி அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நான்கு மாணவர்கள் வயிற்று வலியால் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவர் மேல் சிகிச்சைக்காக நெல்லைக்கு மாற்றப்பட்டனர்.

நெல்லை அரசு மருத்துவமனை
திருநெல்வேலி ஜூன் 29: திருநெல்வேலி களக்காடு (Tirunelveli Kalakkadu) அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இடைவேளையில், நான்கு மாணவர்கள் யார் அதிகமாக மாத்திரை சாப்பிடுவார் என விளையாட்டு போட்டி வைத்தனர். சந்துரு 15 மாத்திரைகள், நந்த பெருமாள் 7, நரேஷ் 3, வெற்றி மதன் 4 மாத்திரைகள் சாப்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நாங்குநேரி அரசு மருத்துவமனையில் (Nanguneri Government Hospital) மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு, இருவர் மேல்சிகிச்சைக்காக நெல்லைக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் தொடர்பாக களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியைச் சேர்ந்த பாலனின் மகன் சந்துரு (12), மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12), கீழ பத்தையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12) ஆகியோர் அனைவரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
2025 ஜூன் 28-ஆம் தேதி நேற்று பள்ளிக்கு சென்ற மருத்துவக் குழுவினர், மாணவர்களின் உடல்நல பரிசோதனை செய்தபோது, சத்து குறைவான மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கினார்கள். இதில், இந்த நான்கு மாணவர்களுக்கும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
யார் அதிக சத்து மாத்திரை சாப்பிடுவார் என விபரீத போட்டி
பள்ளி இடைவேளையில், யார் அதிகமாக சத்து மாத்திரைகள் சாப்பிடுவார் என்ற விளையாட்டாக போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதில் சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகள், நந்த பெருமாள் 7, நரேஷ் 3, வெற்றி மதன் 4 மாத்திரைகள் சாப்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி உண்டாக, உடல்நிலை பாதிக்கப்பட்டது.
உடல் நலம் பாதித்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி
துரிதமாக பெற்றோர்கள் அந்த நால்வரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் சந்துரு மற்றும் நந்த பெருமாள் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து களக்காடு போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்துக்காக கொடுக்கப்பட்ட மாத்திரைகளை விளையாட்டாக அதிக அளவில் எடுத்துக் கொண்டதால், மாணவர்கள் மருத்துவமனை சென்ற பரிதாப சம்பவம் அந்த பகுதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரை
மாணவர்கள் உடல்நல வளர்ச்சிக்காக தமிழக பள்ளிகளில் சத்து மாத்திரைகள் அரசு மூலம் வழங்கப்படுகின்றன. இதில் இரும்புச் சத்து (Iron), ஃபாலிக் ஆசிட் (Folic Acid) போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய மாத்திரைகள் வாரத்தில் ஒரு முறை மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இவை ரத்தச்சோகையும், ஊட்டச்சத்து குறைபாடுகளையும் தடுக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன.
மருத்துவர் பரிந்துரை மற்றும் ஆசிரியர்களின் கண்காணிப்பில் இந்த மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். எனினும், இதை முறையாக வழங்காமை, விளக்கமின்றி பல மாத்திரைகள் கொடுப்பது போன்ற தவறுகள் மாணவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் சுகாதார துறை எச்சரிக்கின்றது. எனவே, பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.