திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!
Nanguneri Double Murder : நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரட்டை கொலைக்கான அதிர்ச்சி அளிக்கும் பரபரப்பு காரணம் தெரிய வந்துள்ளது.

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்துக்கான காரணம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதிக்குள் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் அந்தப் பகுதியில் உள்ள தேநீர் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதனால், கடையில் அமர்ந்திருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய போது, அவர்களை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியது. இதைத் தொடர்ந்து, களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வூர் கிராமங்களிலும் புகுந்து கண்ணில் பட்டவர்களை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டது. இதில், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜான், ஒடிசாவைச் சேர்ந்த கட்டா என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நெல்சன் பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் உள்ளிட்ட 6 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 தனிப்படைகள் அமைத்து 13 பேர் கைது
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், 14 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாக 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த ஒருவரை, மஞ்சங்குளத்தை சேர்ந்த நபர் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பலி வாங்கும் நோக்கில், பெரும்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சங்குளத்தை சேர்ந்தவர்களை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!
தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை சம்பவங்கள்
இவ்வாறாக பழிக்கு பழி கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதில், கைதாகி சிறையில் இருந்து வரும் நபர்கள் தற்போது நடைபெற்ற கொலைக்கு திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஜாதிய பெருமையை நிலை நாட்டுவதற்காக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கும்பல் கண்ணில் பட்டவர்களை வெட்டிவிட்டு நவீன் வாழ்க என்ற கோஷத்தை எழுப்பி சென்றதாக அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நவீன் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபர்
அந்த வீடியோவில், தற்போது நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு கிடையாது. நான் வேறு மாவட்டத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நவீன் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர் திருநெல்வேலி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்று மாவட்ட காவல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு சமுதாயத்தை சேர்ந்தவர்களிடையே நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யகோரி, கொலையுண்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இந்த கொலை சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் படிக்க: குடிப்பதற்கு பணம் தரமாட்டாயா… என்ன செய்கிறேன் என்று பார்… மகன் செய்த பகீர் சம்பவம்!