எரிந்த காரில் 4 சடலம் மீட்கப்பட்ட சம்பவம்.. சென்னையை சேர்ந்தவர்கள் நெல்லையில் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்!
Tirunelveli Crime : திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளையில் காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன. இதில், கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எரிந்த காரில் 4 சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 17) தீயில் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், வள்ளியூர் போலீசார் சென்று பார்த்தபோது, அந்த காரின் முன் இருக்கையில் ஒரு ஆணும், பின் இருக்கையில் இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணும் எரிந்த நிலையில் எலும்பு கூடாக இருந்த தடயம் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்திருந்தனர். சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் மற்றும் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும், காரின் பதிவு எண் மற்றும் காரின் என்ஜின் எண் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் துப்பு தொலங்கியது. இதில், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா, இவர்களது மகள் அப்ரின் பாத்திமா, மகன் முகம்மது காஜா என்பது தெரிய வந்தது. இவர்கள் நால்வரும் கடந்த 13- ஆம் தேதி திருநெல்வேலிக்கு வந்துள்ளனர்.
மேலும் படிக்க: தாம்பரம் – காரைக்கால் ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கடன் சுமை காரணமாக தற்கொலை செய்தனரா
அங்கு, இஸ்லாமியர்களின் புனித தளமாக விளங்கி வரும் ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவில் நடைபெற்ற ரமலான் நோன்பின் 27- ஆவது லைலத்துல் கத்ரு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர். பின்னர், பள்ளிவாசலில் இருந்த ஏழைகளுக்கு தானமாக உடைகளை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். பின்னர், பெட்டைக்குளம் காட்டுப் பகுதியில் காரை நிறுத்தி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பிரச்சினை காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள தங்களது சொந்த வீட்டை விற்றதாக தெரிகிறது.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
மேலும், கடன் இருந்ததால், அதன் தொல்லை தாங்க முடியாமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை வந்துள்ளனர். பின்னர், அந்தப் பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை முகம்மது ரபி தன் மீதும், மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயில்.. வாகன ஓட்டிகளுக்காக சென்னையில் 40 சிக்னல்களில் பசுமை பந்தல்கள்!