தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு!
கடந்த நவம்பர் 15, 16 ஆகியத் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தப் பட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 31: ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று, இரண்டு 2025 நவம்பர் மாதம் எழுதிய 4 லட்சத்து 25 ஆயிரம் பேரின் தேர்வு முடிவுகளை குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான htrb.tn.gov.inல் சென்று ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 அல்லது 2 என்ற ஆப்ஷனில் என்ன மொழியோ அதை தேர்வு செய்து உங்களின் ஹால் டிக்கெட் எண்ணை பதிவிட்டு ரிசல்டை அறியலாம். தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்.2ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்:
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் செயல்பட்டு வருகிற அரசு மற்றும் பிற துறை பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர். அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
நவம்பர் மாதம் நடந்த தேர்வு:
இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025க்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 தேர்வானது நவம்பர் 15ஆம் தேதி 367 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை 92,412 பேர் எழுதினர். அதேபோல் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II, அடுத்த நாளான நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 3,31,923 பேர் எழுதினர். இதன்படி தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளை மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.
டெட் தேர்வு மதிப்பெண் குறைப்பு:
இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி 150 மதிப்பெண்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள், எஸ்சி, எஸ்டி அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தது. இந்த அறிவிப்பின்படி ஏற்கனவே 2025 நவம்பர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி உள்ளவர்களுக்கும் மதிப்பெண் குறைத்து கணக்கிடப்படும் என தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க : திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு!
தேர்வு முடிவுகள் வெளியீடு:
இந்நிலையில், பள்ளி கல்வித்துறையின் குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை அதன் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் தகுதிபெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 2 தேதி மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in- தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.