சென்னையில் பரவலாக மழை: தமிழகத்தில் எத்தனை நாட்கள் மழை தொடரும்..?

Chennai Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மே 30, 2025 அன்று பரவலாக மழை பெய்தது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக இந்த மழை பெய்கிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளைய வானிலை முன்னறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் பரவலாக மழை: தமிழகத்தில் எத்தனை நாட்கள் மழை தொடரும்..?

தமிழகத்தில் எத்தனை நாட்கள் மழை தொடரும்

Published: 

30 May 2025 17:27 PM

சென்னை மே 30: சென்னை மற்றும் புறநகர் (Chennai and suburbs) பகுதிகளில் 2025 மே 30 இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை விழுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் (Rain likely to continue in Ranipet and Tiruvallur districts) மாவட்டங்களில் மழை தற்போதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கும் இந்த மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் (Weather Center) தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம்

மேற்கு வங்காளம் – வங்கதேச கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2025 மே 29 நேற்று மதியம் சாகர் தீவுகள் மற்றும் கேபுபாரா இடையே கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழை, பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (2025 மே 30, வெள்ளிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் மேற்குத் தொடர்ச்சி மலைநிலைகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2025 மே 29 நேற்று வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 2025 மே 30 இன்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

நாளைய வானிலை முன்னறிவிப்பு: மே 31, சனிக்கிழமை

நாளை (மே 31) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° முதல் 37° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28° முதல் 29° செல்சியஸ் இருக்கும் என வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையின் தற்போதைய வானிலை நிலவரம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35° முதல் 36° செல்சியஸ் வரை, குறைந்தபட்ச வெப்பநிலை 28° முதல் 29° செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.