தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

CM MK Stalin: வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூட பாஜக புராண கால சரஸ்வதி நாகரீகத்தை ஆதரிக்கிறது என்றும் சரஸ்வதி நாகரிகத்திற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில் தமிழ் தொன்மையை நிராகரிக்கின்றனர் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

முதலமைச்சர் ஸ்டாலின்

Published: 

13 Jun 2025 19:35 PM

நமது வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகளாக நாம் போராடி வருகிறோம் என்றும் ஆனால் அவற்றை அழிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) தெரிவித்துள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் எதிர்த்தும் புராணகால சரஸ்வதி நாகரீகத்தை பாஜக ஆதரித்து வருவதாகவும், சரஸ்வதி நாகரீகத்திற்கு (Sarasvati Civilisation) ஆதாரங்கள் இல்லாத நிலையில் தமிழ் தொன்மையை நிராகரிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கீழடியில் 2015 ஆம் ஆண்டு முதல் 9 கட்டங்களாக அகழாய்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதனை மத்திய அரசு வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது மேலும் இதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு ஆராய்ச்சிகள் தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியஅரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் 2025 ஜூன் 18ஆம் தேதி மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உண்மையில் இது போன்ற ஆராய்ச்சிகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமை கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உலகமும் காலமும் பார்த்துக்கொண்டிருக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்:


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கீழடி விவகாரத்தில் நமது வரலாற்றை அழிக்க முயற்சி மேற்கொள்கிறார்கள் என குறிப்பிட்டு ஒரு பதிவினை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ கீழடி அகழாய்வு ஆராய்ச்சிகள் குறித்து சர்வதேச ஆய்வகங்களில் இருந்து கார்பன் தேதியிடப்பட்ட கலைப் பொருட்கள் மற்றும் அக்சல்லரைட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் அறிக்கைகள் இருந்த போதும் கூட கூடுதல் ஆதாரங்கள் வேண்டும் என கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூட பாஜக புராண கால சரஸ்வதி நாகரீகத்தை ஆதரிக்கிறது.

சரஸ்வதி நாகரிகத்திற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில் தமிழ் தொன்மையை நிராகரிக்கின்றனர். தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றி கீழடி வெளியே ஆதாரங்களுடன் கொண்டு வந்த போதும் கூட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதனை ஏற்க மறுக்கிறது. நமது வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டு காலமாக போராடி வருகிறோம். அதை அழிக்க அவர்கள் ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள். உலகம் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறது காலமும் அப்படிதான்” என தெரிவித்துள்ளார்