கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – இனி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Karur Stampede : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பான பொது நல மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செ்ய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை அக்டோபர் 2, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். குறிப்பாக பல கட்சிகள் களத்தில் இருந்தபோது, தவெக நிர்வாகிகள் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் அக்கட்சியின் தலைவர் விஜய் அங்கிருந்து உடனடியாக கிளம்பியது தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு நியமனம்
பொது நல வழக்கு தொடர்ந்த மனு தாரர் தனது மனுவில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அதற்கான உத்தரவை தான் பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவனங்களையும் ஒப்படைக்க கரூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தத தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை… மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் – நீதிபதி காட்டம்




தவெகவினரை பாதுகாக்கிறீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் அளித்த பதிலில் தவறிழைத்தவர்களை அரசு பாதுகாக்கவில்லை. தவெக கேட்ட இடத்தைத் தான் ஒதுக்கினோம். தவெக நிகழ்ச்சிக்கு 559 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர். டிசம்பர் மாதம் திட்டமிட்ட நிகழ்ச்சி திடீரென முன்கூட்டியே செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் பிரச்சாரம் செய்துள்ளார் என குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் தவெகவினர் வாதம்
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல்குமார் தரப்பு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 3, 2025 இன்று நடைபெற்ற நிலையில், தவெகவின் வழக்கறிஞர் தன் வாதங்களை முன் வைத்தார். அவர் பேசியதாவது, கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துள்ளனர். காவல்துறை ஏன் தடியடி நடத்தியது? வேலுச்சாமிபுரத்திற்கு பதில் வேறு இடத்தில் அனுமதி கேட்டு முறையிட வந்தோம்.
இதையும் படிக்க : ’விஜயின் இதயத்தில் வலியே இல்ல.. சினிமா வசனம் பேசுறாரு’ சீமான் பளீச்!
நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முறையிட முடியவில்லை. இதனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட வேலுச்சாமி புரத்திலேயே பரப்புரை நிகழ்வை நடத்தினோம். விஜய்யின் பரப்புரைக்கு காலியான ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. அதற்காக தவெக பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும். கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை என தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.