தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..
இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. குறிப்பாக, கூட்டணி இறுதியாவதற்கு முன், கட்சியில் ஒரு தரப்பினர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க அழுத்தம் கொடுத்தது, திமுகவுடன் கடும் மோதல் போக்கை ஏற்படுத்தியது என கூட்டணி அமைப்பதற்கு முன்பு அக்கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவின. இதற்கிடையே, கடும் இழுபறிக்கு பின்னர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!
அதிருப்தியில் காங்கிரஸ் நிர்வாகிகள்:
இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மீது ஜோதிமணி எம்.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் புகார் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய தலைவரை நியமிக்க ஆலோசனை:
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது நிருபர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, ‘தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் பதவியில் இருந்து விலக உள்ளேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக பணி செய்ய உள்ளேன். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை’ எனக் கூறினார். செல்வப்பெருந்தகையின் இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
தலைவர் பட்டியலில் யார் யார்?
மாநில தலைவர் பதவியை பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு ஆகியோரும் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மாநில தலைவர் பதவிக்கு தகுதியான 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்ய கிரிஷ் சோடங்கருக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: “தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!
புதிய நபருக்கே வாய்ப்பு?
அந்தவகையில், புதியவர்களும், ஏற்கனவே தலைவராக இருந்தவர்களின் சிலரின் பெயர்கள் தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால், கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லும் ஒரு புதிய நபரை மாநில தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில தலைவரை தேர்வு செய்யும் பணியினை ரகசியமாக மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, மே 15ம் தேதிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.