போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
Teachers salary hike: இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது ரூ.12,500 ஊதியமாக பெற்று வரும் ஆசிரியர்களுக்கு, ரூ.15,000 ஆக ஊதியம் உயர்த்தி தரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, ஜனவரி 14: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 20 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, தங்களது கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல மாட்டோம், போராட்டத்தை தொடருவோம் எனவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஜனவரி 14) காலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையும் படிக்க: டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!!
ரூ.2,500 ஊதிய உயர்வு:
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, தற்போது ரூ.12,500 ஊதியமாக பெற்று வரும் ஆசிரியர்களுக்கு, ரூ.15,000 ஆக ஊதியம் உயர்த்தி தரப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதோடு, தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் செயல்படுத்துவோம் என்றும் உறுதி தெரிவித்தார்.
அரசின் நிதி பற்றாக்குறை:
2 ஆண்டுகளாக ரூ.3,548 கோடி கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளதாக தங்களது விளக்கத்தை கூறிய அவர், நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். எனினும், பேச்சுவாரத்தையின் போது, ஆசிரியர் சங்கங்கள் தாங்கள் எப்படி ரூ.12,500 ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியும், அரசின் நிலை தங்களுக்கு புரிகிறது. ஆனால், தங்களின் நிலையையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதோடு, அவர்களது முழுநேர பணியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. அவர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா? உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!!
போரட்டத்தை நிறைவு செய்து ஊர் தரும்ப வேண்டுகோள்:
இதனை கருத்தில் கொண்டே இந்த இடைக்கால நடவடிக்கையை எடுத்துள்ளதாக அன்பில் மகேஷ் கூறினார். தொடர்ந்து, இந்த பொங்கலை மகிழ்ச்சி பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வருகின்ற காலத்தில் அந்த மகிழ்ச்சி என்பது உறுதிப்படுத்தும் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். தொடர்ந்து, போராட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அதனை முடித்துவிட்டு, தங்களது சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.