கிளாம்பாக்கத்தில் ரூ.79 கோடி பிரம்மாண்டம்… விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா!
Kilambakkam Skywalk: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.79 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைபாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எப்போது திறக்கப்படும் என்ற தகவலை சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கும் தேதி அறிவிப்பு
சென்னை நகரப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை நகரின் வெளிப்புற பகுதியான கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் ஆகியவை சென்னை நகரப் பகுதியில் வருவதில்லை. இதனால், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் நகரப் பகுதிக்குள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கிடையாது.
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையம்
இந்த நிலையில், சென்னை நகரப் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கான முறையான பேருந்து வசதி மற்றும் ரயில் வசதி ஆகியவை மேற்கொள்ளப்படாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சென்னை உள்பட பிற பகுதிகளில் இருந்து கிளாம்பக்கத்திற்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, சென்னை நகரத்தில் இருந்து, கிளம்பாக்கத்திற்கு ரயில்கள் இயக்கப்படுவதற்காக திட்டமிடப்பட்டது. அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்துக்கு எதிரே புதிதாக ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு… எவ்வளவு தெரியுமா?
ரூ.79 கோடியில் கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை
இந்த வழியாக சென்று வரும் ரயில்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனிடையே, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் வகையிலும் ரூ.79 கோடியில் ஆகாய நடைபாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆகாய நடைபாதையானது 279 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆகாய நடைபாதையில் உள்ள வசதிகள்
இந்த நடை பாதையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோர் எளிதாக பயன்படுத்துவதற்காக சாலையின் இரு புறங்களிலும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்), 4 மின் தூக்கிகள் (லிப்ட்) மற்றும் தரைத்தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதாக பயணிகள் அடையலாம். இந்த ஆகாய நடைபாதை பணிகளானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் ஆகாய நடைபாதை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!