மாநிலங்களவையில் கமல்ஹாசனின் முதல் உரை… என்ன பேசினார் தெரியுமா?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மாநிலங்களவையில் பிப்ரவரி 4, 2026 அன்று தனது முதல் உரையை பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், என் மொழிக்கு எதிரான தாக்குதல்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள அண்ணா எங்களுக்கு கற்றுத்தந்தார் என்றார்.

கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு பிப்ரவரி 4, 2026 அன்று மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது உரையில், மொழி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை குறித்து தனது கருத்துகளை அவர் முன்வைத்தார். குறிப்பாக, நான் தமிழ்நாட்டின் பரமக்குடி என்ற சிறிய ஊரிலிருந்து வந்தவன். இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்து உருவான ஒரு நாடு. அதைத்தான் இந்திய அரசியலமைப்பு நிறுவியுள்ளது என்று தனது உரையைத் தொடங்கினார்.
‘அண்ணா தான் என் வழிகாட்டி’
மேலும் பேசிய அவர், முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை என்னை வழிநடத்துகிறார். என் மொழிக்கு எதிரான தாக்குதல்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள அண்ணா எங்களுக்கு கற்றுத்தந்தார். கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்து என் சிந்தனையை வடிவமைத்தார். அண்ணா தான் என் மையம். இன்று, அவர் உரையாற்றிய அதே அவையில் நானும் பேசுகிறேன். என் இதயத்தில் கொந்தளிக்கும் புயலில் இருந்து பிறக்கும் வார்த்தைகளால் பேசுகிறேன். இது சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம் என்று பேசினார்.
மாநிலங்களவையில் கமல்ஹாசனின் முதல் உரை
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவைத் தலைவருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.#KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #RajyaSabha pic.twitter.com/RqA0rM7SDf
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 4, 2026
இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இடைநீக்கம்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்..
மேலும் பேசிய அவர், பள்ளிப்படிப்புடன் கல்வியைக் கைவிட்டவன் பொருளாதாரம் பற்றி பேசுவதை நீங்கள் ஆச்சரியமாக பார்க்கலாம். ஆனால் அது எனக்கு பிரச்சனை இல்லை. காந்தி எனக்கு கோபமில்லாமல் பேச கற்றுத் தந்தார். பெரியார் எனக்கு புள்ளிவிவரங்களோடு பேச கற்றுத் தந்தார். அண்ணா இந்த மகத்தான அவையை புரிந்துகொள்ள உதவினார் என்றார்.
தேர்தல் ஆணையம் குறித்து கடும் விமர்சனம்
இந்திய தேர்தல் ஆணையம் தொடர்பாகவும் கமல்ஹாசன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறுகளை ஏற்க முடியாது. பீகாரில் தொடங்கி நாடு முழுவதும் பரவி வரும் எஸ்ஐஆர் என்ற நோயை ஏற்க முடியாது. அதை எதிர்த்து என் சகோதரி மம்தா பானர்ஜி போராடி வருகிறார். உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டமும் நடத்துகிறார் என்றார்
இதையும் படிக்க : ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!
அதனைத் தொடர்ந்து, நான் கடவுளிடம் கைகளை கூப்பி வேண்டப் போவதில்லை. என் பகுத்தறிவு மனம் பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுள் என்ற எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டது. தமிழ் செழிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும்” என்று கூறி தனது உரையை முடித்தார். மேலும் தனது உரையின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.