பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் அறிவிப்பு..
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் இருந்து மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷமான வழிபாடாகும். காலங்காலமாக பலர் இதனை பின்பற்றி வருகின்றனர்.

கோப்பு புகைப்படம்
திருவண்ணாமலை, மார்ச் 2, 2026: பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதே சமயம், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
பௌர்ணமி வழிபாடு:
இதற்காக திருவண்ணாமலை மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் இருந்து மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷமான வழிபாடாகும். காலங்காலமாக பலர் இதனை பின்பற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க: மாசி பெளர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் சுற்றிவந்து, பின்னர் சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள். கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்:
அதன்படி, மார்ச் 2, 2026 காலை 6.29 மணிக்கு தொடங்கி, மார்ச் 3, 2026 மாலை 5.52 மணி வரை பௌர்ணமி நிறைவு பெறுகிறது. இந்த நேரம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு உகந்ததாகும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கிரிவலம் செல்லும் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் அறிவிப்பு:
இந்த சூழலில், விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வண்டி எண் 06130 – விழுப்புரம் முதல் திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரயில் – மார்ச் 3 அன்று காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
அதேபோல், மறுமார்க்கமாக திருவண்ணாமலை முதல் விழுப்புரம் செல்லும் ரயில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இந்த ரயில் வெங்கடேஸ்வரபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்கள் வழியாகச் செல்லும்.
இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இது முன்பதிவு இல்லா (Unreserved) ரயில் என்பதால், பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.