லேப்டாப்பில் கருணாநிதி-ஸ்டாலின் படம் நீக்கம்….மாணவர்களே கவனம்…எல்காட் நிறுவனம் எச்சரிக்கை!
Tamil Nadu Government Free Laptop: தமிழக அரசு சார்பில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணிணியில் முன் புறத்தில் உள்ள கருணாநிதி, மு. க. ஸ்டாலின் ஆகியோரின் படங்களை நீக்கும் மாணவர்களுக்கு எல்காட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கும் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். அதன்படி, மாவட்டம் தோறும் அரசு கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் பிப்ரவரி இறுதிக்குள் சுமார் 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினியில் முன்புறத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை விரும்பாத சில மாணவர்கள் அதனை நீக்குவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாணவர்களுக்கு எல்காட் நிறுவனம் எச்சரிக்கை
அந்த வீடியோவில், கருணாநிதி மற்றும் மு. க. ஸ்டாலினின் படங்களை நீக்கிவிட்டு தங்களுக்கு பிடித்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பட நடிகர்களின் படங்களை ஒட்டி உள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எல்காட் அதிகாரிகள் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சார்பில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்களுக்கு ஒரு ஆண்டு இலவச வாரண்டி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்துக்கு வரும் 3 அம்ரித் பாரத் ரயில்கள்…சேவை எப்போது தொடங்குகிறது..பயணிகள் மகிழ்ச்சி!




முதல்வர் படத்தை நீக்கினால் வாரண்டி ரத்து
தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியின் முன்புறம் பொறிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரின் படங்களை ஒரு திரவம் கொண்டு நீக்குவது போன்ற தேவையில்லாத செயல்களில் மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அரசு வழங்கிய இலவச லேப்டாப்பில் உள்ள முதல்வர்களின் படங்கள் நீக்கப்பட்டால் அதற்கான ஒரு வருட வாரண்டி ரத்து செய்யப்படும்.
எதிர்காலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால்
இதனால், எதிர்காலத்தில் இலவச மடிக்கணினியில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதனை நீக்குவதற்கான உத்தரவாதத்தை பெற முடியாது. எனவே, அரசின் இலவச மடிக்கணினியில் முன்புறமுள்ள இரு படங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும், அதில் உள்ள சீரியல் எண் இருந்தால் மட்டுமே சர்வீஸ் செய்து திரும்ப வழங்கப்படும். இதில், ஏதேனும் ஒன்று இல்லாமல் போனாலும் அரசின் வாரண்டியே பெற முடியாது.
லேப்டாப்பில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது
மேலும், லேப்டாப்பின் உள்பகுதி எந்தவித சேதமும் அடைந்திருக்க கூடாது. இதே போல, லேப்டாப்பில் உள்ள செயல்பாட்டு தளம் (operating system) வேறு மாற்றம் செய்யப்பட்டு இருக்க கூடாது. மொத்தத்தில், அரசு வழங்கிய மடிக்கணினியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், சீரியல் என்னுடன் இருந்தால் மட்டுமே அரசின் நேரடி வாரண்டி கிடைக்கப்பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: வளர்த்து ஆளாக்கிய சித்தி இறந்ததால் சிறப்பு காவல் ஆய்வாளர் விபரீத முடிவு.. திருவள்ளூரில் சோகம்!!