‘உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது’ செங்கோட்டையன் பளார்!!
Sengottaiyan about eps: செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். தன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைவரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி வருவதாகவும் குற்றம்சாட்டிய செங்கோட்டையன், இப்படி கட்சியில் இருந்து எவ்வளவு பேரை அவர் நீக்குவார் என்றும் கவலை தெரிவித்திருந்தார்.

இபிஎஸ், செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையம், நவம்பர் 09: உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தானும் பயணங்களை மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் கூறினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தான் எப்போதும் அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன் என்றும் ஏற்கெனவே அவர் தெளிவுப்படுத்தி விட்டார். அதோடு, கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல், முருகன் நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Also read: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு
அதிருப்தியில் செங்கோட்டையன்:
எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியடைந்த செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்தார். இதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, அவரிடம் இருந்து கட்சி பதவிகளை பறித்தார். தொடர்ந்து, அதிமுக அடிப்படை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினராக மட்டும் அவர் இருந்தார். இந்தநிலையில், அக்.30ம் தேதி தேவர் ஜெயந்தியன்று அவர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து பசும்பென் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தினார். அதோடு, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என அவர்களுடன் கூட்டாக பேட்டியும் அளித்தார்.
இதையடுத்து, செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மூத்த தலைவரை ஒரேநாளில் கட்சியில் இருந்து எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கியது அரசியலில் பெரும் சலசலசப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேசமயம், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலர் கட்சியில் இருந்து விலகினர். தொடர்ந்து, செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெருகும் ஆதரவு கடிதம்:
இதனிடையே, கோபிசெட்டிபாளையம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு சங்கங்ககளில் இருந்து தனக்கு கடிதம் வந்ததாக கூறியுள்ள அவர், உங்களுடைய தியாகத்தை பற்றி, உழைப்பை பற்றி, நீங்கள் செய்கின்ற சேவையை பற்றி யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்ற முறையில் இந்த கடிதங்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை என்றார். மேலும், உழைப்பால், தியாகத்தால் உயர்ந்த அவர், கருணை உள்ளம் படைத்தவர், தொண்டர்களுக்காக முன்நின்று தியாகத்தை செய்தவர். தொண்டர்களை காக்க எண்ண செய்ய வேண்டுமோ செய்தார். அதேபோல், ஜெயலலிதாவும் இயக்கத்தை காக்க தனது நகை, பொருட்களை வழங்கி இயக்கத்தை வலிமைப்படுத்தினார்.
அப்படி, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நாங்களும் பயணங்களை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். அதேசமயம், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எதுவும் அவர் கூறவில்லை.