Crime: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!
Ariyalur Crime News: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இளைஞர் அறிவழகன் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் அவரது தாய் சசிகலா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிப்பழக்கம் உள்ள அறிவழகனுடன் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் அவரைத் தாக்கியதில் அவர் இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரியலூர், ஆகஸ்ட் 26: அரியலூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக அவரது தாய் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே செட்டிகுழிபள்ளம் என்ற ஊர் உள்ளது. இங்கு அரவிந்த் என்கிற அறிவழகன் என்ற இளைஞர் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது மனைவி உடல் நலக்குறைவால் இறந்தார். இதன் காரணமாக தனது பெற்றோர் வீட்டிற்கு அருகில் அவர் தனியாக வசித்து வந்தார். இப்படியான நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் அறிவழகன் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது தாயார் சசிகலா உடனடியாக உடையார்பாளையம் காவல்துறையில் புகார் அளித்தார்.
விசாரணையில் முரண்பட்ட தகவல்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அறிவழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயம் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அறிவழகனின் உடல் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சசிகலா முரண்பட்ட பதில்களை அளித்தார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு அதீத சந்தேகம் ஏற்பட்டது.
Also Read: தினமும் மது குடித்ததால் திட்டிய தந்தை.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!




அறிவுரை வழங்கியதால் கைக்கலப்பு
இதனை தொடர்ந்து சசிகலாவிடம் போலீசார் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தனது மகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் என்ன நடந்தது என மேலும் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிப்பட்டது.
அதாவது அரவிந்த் என்கிற அறிவழகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. வேறுவழியின்றி தனது மகனுக்கு சசிகலா பணம் கொடுத்து வந்துள்ளார். மது அருந்துவது மற்றும் அது தொடர்பாக பணம் கேட்பது ஆகியவற்றால் பல நேரங்களில் சசிகலாவுக்கும் அறிவழகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நாளுக்கு நாள் அவரது தொல்லை தாங்க முடியாமல் இந்த விஷயத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என சசிகலா நினைத்துள்ளார். இதற்கிடையில் அவரது உறவினர்களான சத்தியராஜ், சிவா, ராமநாதன், கோகுல்ராஜ், கண்ணகி ஆகியோரை வரவழைத்து அறிவழகனை அழைத்து கண்டித்து ஆலோசனை வழங்க முயன்றிருக்கிறார். ஆனால் அறிவழகன் அவர்களை அவமதிக்கும் போக்கில் செயல்பட்டார்.
இது வாக்குவாதமாக மாறி கைகலப்பில் முடிவடைந்ததால் உறவினர்கள் தாக்கியதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை மர்ம மரணமாக சித்தரிக்க சசிகலா நினைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சசிகலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்தனர்.