சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி! மிடுக்காக அணி வகுத்து வந்த முப்படையினர்!
Governor Ravi Hoists National Flag: சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் தேசியக் கொடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முப்படைகள் மற்றும் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் .

சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ரவி
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக அரசு சார்பில் 77- ஆவது குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று காலை 7:55 மணிக்கு காரில் வருகை தந்தனர். அவர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றார். இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் கொடிக் கம்பத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கொடியை ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர். என். ரவி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்காக அணி வகுப்பு மேடைக்கு வருகை தந்தார். அப்போது, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை உள்ளிட்ட படைப் பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனை, ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றுக் கொண்டார்.
அணிவகுப்பில் அணிவகுத்து வந்த படைகள்
இந்த அணி வகுப்பில், தாம்பரம் விமானப்படை நிலையத்தின் வின் கமாண்டர் பரம்வீர் சிங் அரோகரா தலைமையில் விமானப்படையினர் அணி வகுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, ராணுவ கேப்டன் விஜித் விஸ்வா தலைமையில் ராணுவ வீரர்கள் மிடுக்காக அணிவகுத்து வந்தனர். இவர்களுக்கு பின்னால் கப்பல் படை லெப்டினன்ட் கமாண்டர் சுபம் ஹுரா தலைமையில் கப்பல் படை வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து வருகை தந்தனர்.
மேலும் படிக்க: நாட்டின் 77வது குடியரசு தினம்.. கர்தவ்ய பாதையில் நடக்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு.. என்னென்ன சிறப்புகள்?
முப்படைகளின் ஊர்திகள் அணிவகுப்பு
இதைத் தொடர்ந்து, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவினர், வான் படை பிரிவினர், ராணுவப் படை ஊர்தி, நவீன கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடல் படை ஊர்தி, வான் படை ஊர்தி, கடலோர காவல் படை ஊர்தி ஆகியவை அணி வகுத்து வந்தன. இதே போல, சி. ஐ. எஸ். எப். படை பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் படைப் பிரிவினர் மிடுக்காக அணிவகுத்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, காவல்துறையின் முழு பொறுப்பு கமாண்டர் செல்வமணி தலைமையில் காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பெண்கள் பிரிவினர் அணி வகுத்து வந்தனர்.
மிடுக்காக அணி வகுத்து வந்த படைப்பிரிவினர்
தமிழ்நாடு ஆயுதப்படை முரசிசை குழுவினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், கர்நாடக மாநில காவல் சிறப்பு படைப்பிரிவினர், தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவினர், தமிழ்நாடு காவல் கூட்டுக் குழு முரசிசை குழுவினர், கடலோர பாதுகாப்பு குழு கலை பிரிவினர் உள்ளிட்டோர் மிடுக்காக அணிவகுந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்க: 77வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.. செல்போனில் நேரலை எப்படி பார்ப்பது? விவரம் இதோ..