உதயநிதி சொத்து விவகார வழக்கு.. வருமான வரித்துறைக்கு பறந்த உத்தரவு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Stalin Nomination Asset: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வருகிற 20- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதிக்குள்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட போது, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரத்துக்கும் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த தொகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த சொத்து விவரம் தொடர்பான பிரமாண பத்திரத்தில் முரண்பாடு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 15) நடைபெற்றது.
வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 20- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ரெட் ஜெயண்ட் மூலம் ரூ.7 கோடியே 36 லட்சம் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் அந்த சொத்து விவரம் தொடர்பான எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.
மேலும் படிக்க: வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..
ரெட் ஜெயண்ட் மூவிஸ் முதலீட்டில் முறைகேடு
அதே வேளையில் அவரது மனைவி மட்டும் ரூ.2.63 லட்சம் முதலீடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த முதலீடுகளில் முரண்பாடு உள்ளது. மேலும், இந்த முதலீடுகள் தொடர்பாக எந்த விதமான விளக்கத்தையும் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. அத்துடன் கடந்த 2021 தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரூ.11 கோடியே 6 லட்சம் தனியார் நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் அந்தத் தொகை ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
கணக்கில் வராத ரூ.1.6 கோடி
அப்படி என்றால் மீதமுள்ள ரூ.1.6 கோடி பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரம் தெளிவாக பதிவிடப்படவில்லை. இதன் மூலம் கடந்த 2020- ஆம் ஆண்டு ரூ.2 கோடி வருமானம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்த உதயநிதி, தற்போது ரூ.10.98 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் இதில், வருமானம் மற்றும் சொத்து அதிகரித்ததாக எந்த விதமான தகவலும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் படிக்க: திருப்பூரில் விஜய்யின் பரப்புரை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த 14 பேர்..

