சுட்டெரிக்கும் சூரியன்.. அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.. வானிலை சொல்வது என்ன?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையில் தீவிரம் குறைந்து வந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் வேலூரில் 39.3 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 38.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

வானிலை நிலவரம், ஜூன் 30, 2025: தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதன் தீவிரம் படிப்படியாக குறைந்து தற்போது மழை என்பது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சென்டிமீட்டர் அளவு மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூன் 30 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையானது ஜூலை 6 2025 வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
இது ஒரு பக்கம் இருக்க ஜூன் 30 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளை லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவான வெப்பநிலை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/768gaCALNy— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 30, 2025
தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் வேலூரில் 39.3 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 38.5 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியில் 38.3 டிகிரி செல்சியஸும், தஞ்சாவூரில் 39 டிகிரி செல்சியசும், பரங்கிப்பேட்டையில் 38 டிகிரி செல்சியஸும், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியசும், வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியசம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.1 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து பதிவாகினது குறிப்பிடத்தக்கது.