கொலை வழக்கு.. 21 பேருக்கு முதலில் விடுதலை.. பின்னர் ஆயுள் தண்டனை.. 13 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!
Villupuram Murder Case: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடைய 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

கொலை வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
விழுப்புரம் மாவட்டம், காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர். இவருக்கும், இதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவருக்கும் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஸ்கர் தான் வேலை பார்த்து வரும் உரிமையாளரான கிளியனூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்த வில்வமணி என்பவருடன் சேர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 29- ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திரு விழாவை நடத்தினார். இந்த திருவிழா முடிந்ததும் மறுநாள் காலை பாஸ்கர் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த கிருஷ்ணவேணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பாஸ்கரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
21 பேர் கைது- நீதிமன்றம் விடுதலை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணி, அவரது மகன்கள் மதன்குமார், மதன்ராஜ் உள்பட 21 பெயரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டிவனம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 21 பேரை கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திண்டிவனம் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாஸ்கரின் மனைவி அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜோதி ராமன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்…3 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்!
திண்டிவனம் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து
இதில், விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அதில், விசாரணை நீதிமன்றம் நம்பகமான ஆதாரங்களை முற்றிலும் நிராகரித்துள்ளது. சிறிய அளவிலான முரண்பாடுகளுக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த வழக்கில் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் நம்பகமானவை. அவற்றை மறு பரிசீலனை செய்ததில் சந்தேகங்களுக்கு அப்பால் அரசு தரப்பு தகுந்த ஆவணங்களுடன் நிரூபனம் செய்துள்ளது. எனவே, திண்டிவனம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிறப்பித்து தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
21 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
இந்த கொலை வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ,1000 அபராதமும் விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறோம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்துக்கு 13 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையின் மர்ம பங்களா – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?