கோவை பாலியல் வன்கொடுமை.. கெட்ட கனவாக மறந்து விடுகிறேன்.. பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதம்!
Coimbatore Student harassment Case: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது காதலன் திருமணம் செய்து கொள்ளவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கோவையில் பாலியல் துன்புறுத்தல் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்துகொள்ள சம்மதம்
கோயம்புத்தூர் விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் காரின் உள்ளே மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது 25 வயதான ஆண் நண்பர் ஆகியோர் பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விரட்டி விட்டு, கல்லூரி மாணவியை தர தரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த தவசி ஆகிய 3 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் எனவும், அவர்கள் வாழ்நாள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட மாணவி-ஆண் நண்பருக்கு இழப்பீடு
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சமும், அவரது ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகு அந்த கல்லூரி மாணவி மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் மூலமாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த மாணவி பூரண உடல் நலத்துடன் இருந்து வருகிறார். இந்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்காக அந்த மாணவி கோவையில் உள்ள அவரது ஆண் நண்பர் வீட்டில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் தங்கி இருந்து வந்தார்.
மேலும் படிக்க: விஜய் விவாகரத்து விவகாரம்.. சங்கீதாவுக்கு இலங்கை எம்.பி கண்டனம்… வீடியோ வைரல்!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதல்
இந்த மாணவிக்கும், அவரது ஆண் நண்பருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். கோவையில் பட்டப் படிப்பு படித்து வரும் அந்த மாணவியும், ஆட்டோ கன்சல்டன்ட் நடத்தி வரும் அவரது ஆண் நண்பரும் காரில் தனியாக பேசிக் கொண்டிருந்த போதுதான், இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம், அந்த மாணவியின் ஆண் நண்பருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருந்தது. இதற்காக அவர்களது குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் ஆறுதல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்துகொள்ள சம்மதம்
இந்த நிலையி, இந்த கொடூர சம்பவத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டதாகவும், அந்த மாணவியுடன் சேர்ந்து எதிர்காலத்தில் வாழ உள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அவரது ஆண் நண்பர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த அரசு வழக்கறிஞர் பி.ஜிஷா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. கடலோர மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ..