சென்னை வேளச்சேரி டெலிவரி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. அச்சம் நிறைந்த பூமியாக்கிய திமுக – நயினார் நாகேந்திரன் கண்டனம்..

Nainar Nagendran: கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் என எங்கு திரும்பினாலும், கடும் போதையில் கொடும் ஆயுதங்களால் ஒருவரை ஓடஓட விரட்டி வெட்டுவதும், குத்திக் கொலை செய்வதும், காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி டெலிவரி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. அச்சம் நிறைந்த பூமியாக்கிய திமுக - நயினார் நாகேந்திரன் கண்டனம்..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Jan 2026 06:40 AM

 IST

சென்னை, ஜனவரி 20, 2026: சென்னை வேளச்சேரி பகுதியில் டெலிவரி செய்ய வந்த ஒருவரை பழிதீர்க்கும் வகையில் மூன்று பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெலிவரி ஊழியர் மீது நடந்த தாக்குதல்:

23 வயதான பார்த்திபன் என்பவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவர் உணவு டெலிவரி செய்யும் போது, இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மேலும் படிக்க: லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து – நீதிமன்றம் பரபரப்பு கருத்து

பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பார்த்திபன் என்பவருக்கும் அந்த நபர்களுக்கும் இடையே முன்பே ஒரு பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது.

3 பேரை கைது செய்த போலீசார்:

தீபாவளி அன்று பார்த்திபன், போதையில் இருந்த அந்த கும்பலை தாக்கியதாகவும், அதற்குப் பழிதீர்க்கும் நோக்கில் அவர்கள் தற்போது தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நந்தா என்கிற விஷ்ணு, விஷ்ணு சுந்தர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டு சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகளின் அடிப்படையிலேயே மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் கொலைவெறி தாக்குதல்கள் – நயினார் நாகேந்திரன்:

இந்த சம்பவம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் என எங்கு திரும்பினாலும், கடும் போதையில் கொடும் ஆயுதங்களால் ஒருவரை ஓடஓட விரட்டி வெட்டுவதும், குத்திக் கொலை செய்வதும், காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

குற்றவாளிகளுக்கு போதையும் திமிரும் துணிச்சலும் தலைக்கேறி, ஆளும் அரசின் மீது முற்றிலுமாக பயம் விட்டுப்போய்விட்டது. திமுக அரசின் காட்டாட்சியில் எப்போது யாருக்கு என்ன நடக்குமோ என்ற பதற்றத்திலேயே மக்கள் தங்கள் நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது.

மக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது என்றாலே, ஆளும் அரசு அரியணையில் நீடிக்கத் தகுதியில்லை என்பதே பொருள். ஆனால், ‘குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்’ என சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களோ, தனது இரும்புக்கரம் மொத்தமாகத் துருப்பிடித்து இத்துப்போய்விட்டது என்பதை அறியாமல், ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்ற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் இனி தொடரலாமா?”

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?