தகாத வார்த்தைகளில் திட்டி வங்கி ஊழியர்கள் மிரட்டல்.. கடனை திருப்பி செலுத்த முடியாத கார் ஓட்டுநர் விபரீத முடிவு!
ஹரியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, அவரது கையில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டிருப்பதை உறவினர்கள் கவனித்தனர். அந்த எண்ணை விசாரித்தபோது, அது வாகனக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு மிரட்டிய தனியார் வங்கி ஊழியரின் செல்போன் எண் என்பது தெரியவந்தது.

வங்கி ஊழியர்கள் மிரட்டல்
திருவள்ளூர், பிப்ரவரி 05: வாங்கி கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், வங்கி ஊழியர்களால் மிரட்டப்பட்ட பாஜக நிர்வாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பர்மா நகர் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் வசித்து வந்தவர் ஹரி (31). இவர் பாஜக கட்சியின் பொன்னேரி நகர இளைஞரணித் தலைவராக இருந்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹரி கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
மேலும் படிக்க: ஆர்டிஓ செல்லானில் இப்படியொரு மோசடியா? லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விவசாயி..தஞ்சாவூரில் சம்பவம்!
இருசக்கர வாகனத்திற்கு வங்கிக் கடன்:
இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனம் வாங்குவதற்காக பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஹரி கடன் வாங்கியிருந்தார். அதற்கான மாதாந்திரத் தவணைகளை அவர் செலுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் தவணைத் தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தூக்கிட்டுத் தற்கொலை:
இதன் காரணமாக, வங்கி ஊழியர்கள் ஹரியின் செல்போனில் தொடர்பு கொண்டு, தவணைத் தொகையைச் செலுத்துமாறு மிரட்டி, அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஹரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மனமுடைந்த ஹரி, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கையில் இருந்த செல்போன் எண்:
தொடர்ந்து, நேற்று காலை, ஹரியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, அவரது கையில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டிருப்பதை உறவினர்கள் கவனித்தனர். அந்த எண்ணை விசாரித்தபோது, அது வாகனக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு மிரட்டிய தனியார் வங்கி ஊழியரின் செல்போன் எண் என்பது தெரியவந்தது. தனியார் வங்கி ஊழியர்கள் அவரை மிரட்டி வந்தது என்பதும் உறுதியானது.
தகாத வார்த்தைகளால் திட்டி, அழுத்தம்:
இதையடுத்து, சுப்புலட்சுமி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனியார் வங்கி ஊழியர்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு தகாத வார்த்தைகளால் திட்டி, அழுத்தம் கொடுத்து, மிரட்டியதால்தான் ஹரி தற்கொலை செய்துகொண்டார் என்று மனைவியும் உறவினர்களும் கூறி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் படிக்க: GPay பயன்டுத்துகிறீர்களா? உஷார்.. ரூ.2 லட்சம் அபேஸ்.. எச்சரிக்கும் போலீசார்!!
போலீசார் தீவிர விசாரணை:
இதையடுத்து, ஹரியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஹரியின் உறவினர்கள் தனியார் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)