தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…
மாநிலத்தில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
மார்ச் 13, 2026: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை கண்டித்து, மார்ச் 17ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக சமீப காலங்களில் பல மாவட்டங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது:
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம், ஆளும் கட்சியினரின் அராஜகம், வன்முறை மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பலமுறை அறிக்கைகள், ஊடகப் பேட்டிகள் மற்றும் சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை, வழிப்பறி, முதியவர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் புழக்கம் மாநிலத்தில் அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாக உள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடி வழக்கில் திடீர் திருப்பம்.. மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை.. காவல்துறை தகவல்..
இத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை கண்டும் காணாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்:
இந்த நிலையில், மாநிலத்தில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வேலூர், மதுரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும்?
இந்த ஆர்ப்பாட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.”