Thirumavalavan : ஆட்சி மாற்றம் அமித்ஷாவின் கனவாக இருக்கலாம்.. திருமாவளவன் பதில்!
VCK Leader Thirumavalavan Responds to Amit Shah Speech | மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைநகர் டெல்லியில் நிகழ்ந்ததை போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அவரின் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

மதுரை, ஜூன் 10 : தலைநகர் டெல்லியில் நடந்ததை போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Home Minister Amit Shah) பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK – Viduthalai Chiruthaigal Katchi) தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த அவர், ஆட்சி மாற்றம் என்பது அமித்ஷாவின் கனவாகம் இருக்கலாம். டெல்லியில் விளையாடியதுபோல், தமிழ்நாட்டில் விளையாடி முடியாது என்று கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாட்கள் பயணமாக மதுரை வந்திருந்தார். ஜூன் 7, 2025 அன்று இரவு மதுரை வந்த அமித்ஷா, அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அப்போது பாஜக மாநில தலைவர் நையினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து ஜூன் 8, 2025 அன்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சில கருத்துக்களை கூறினார். அது குறித்து பேசி அவர், தலைநகர் டெல்லியில் நடைபெற்றதை போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா
#WATCH | Madurai, Tamil Nadu | Union Home Minister Amit Shah says, “In 2025, we formed the government in Delhi, in 2026, the BJP-NDA will form the government in West Bengal and Tamil Nadu…” pic.twitter.com/P1WQUd7Mh3
— ANI (@ANI) June 8, 2025
அமித்ஷாவின் பேச்சுக்கு பதில் அளித்த திருமாவளவன்
அமித்ஷாவின் இந்த பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள திருமாவளவன், ஆட்சி மாற்றம் என்பது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம். டெல்லியில் விளையாடியது போல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது. வட இந்தியா வேறு, தென்னிந்தியா வேறு. டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு. தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பது இந்தியா அறிந்த உண்மை. ஆனாலும் தமிழ்நாட்டை டெல்லியை போல, மராட்டிய மாநிலத்தை போல ஆக்கிவிடலாம் என்று அவர்கள் முயற்சித்து பார்க்கிறார்கள். ஆனால் அதை இந்த மண்ணில் அரசியல் முதிர்ச்சி அடைந்த தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.