மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்.. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி பாதிப்பு.. ரூ.300 கோடி சரக்கு தேக்கம்..
இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வருங்கால நாட்களில் இதே நிலை தொடர்ந்தால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
திருப்பூர், மார்ச் 12, 2026: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்ய இருந்த பின்னலாடைகள் தேக்கம் அடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ரூபாய் 300 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலேயே தேக்கமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz)-ஐ ஈரான் மூடியுள்ளது. இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் பெருமளவில் கடத்தப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை மூடல்:
இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வருங்கால நாட்களில் இதே நிலை தொடர்ந்தால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: போதிய எரிவாயு கையிருப்பு உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்..
மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக திருப்பூரிலிருந்து பின்னலாடை ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஆடை ஏற்றுமதி பாதிப்பு:
போர் சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலேயே தேக்கமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், துபாய் வழியாக அரபு நாடுகளுக்கு செல்லும் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் மாற்றுப் பாதையில் சுற்றி செல்ல வேண்டியதால் கிட்டத்தட்ட 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இதனால் செலவுகளும் அதிகரிக்கும். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் சரக்குகளை அனுப்ப வேண்டாம் என வர்த்தகர்கள் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: வீட்டு சிலிண்டர்களை வணிகத்துக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை!!
தடையின்றி எரிவாயு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்:
இதுகுறித்து திருப்பூர் ஸ்ரீகாந்த் கூறுகையில், பிரிண்டிங், சாய ஆலைகள், சீட் கட்டிங் சென்டர்கள் போன்ற பிரிவுகளில் எரிவாயு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடை தயாரிப்பில் எரிவாயு பயன்பாடு தவிர்க்க முடியாத ஒரு முக்கிய கட்டமாகும். எரிவாயுவுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்தினால் அது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும்.
எனவே, பின்னலாடை தொழில்துறையினருக்கு தடையின்றி எரிவாயு வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.