‘கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை…’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Kilambakkam Bus Crisis : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய பேருந்துகள் இல்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை...  எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

எடப்பாடி கே.பழனிசாமி

Published: 

07 Jun 2025 20:20 PM

கிளாம்பாக்கம் (Kilambakkam) பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் 5 மற்றும் 6, 2025 ஆகிய 2 நாட்களாக போதிய பேருந்து இல்லாத காரணத்தால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள். பயணிகள் இரவு முழுக்க பேருந்து நிலையத்தில் காத்திருந்த காட்சிகளும், பேருந்தின் ஜன்னல் வழியே ஏறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2 நாட்களாக மதுரை (Madurai), திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மிகக் குறைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஜூன் 5, 6 2025 அன்று பக்ரீத் (Bakrid) மற்றும் முகூர்த்த தினங்கள் என்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். இந்த நிலையில் போதிய பேருந்துகள் இல்லாததால் அவர்கள் பெரும் அவதிக்குளாகினர். இந்த நிலையில் பேருந்து வசதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இதன் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!இன்று வரை “கிளாம்பாக்கம் பரிதாபங்கள்” ஓய்ந்த பாடில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு

 

பக்ரீத் மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப கிளாம்பாக்கம் வந்தனர். ஆனால் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பேருந்து நிலையம் திறந்த காலங்களில் இருந்தே இந்த பிரச்னை இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். மக்களின் வசதிக்காக விரைவில் உரிய பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.