“நீங்க தமிழ்நாட்டுல மட்டும் தான்.. நாங்க அப்படியில்லை” .. திமுகவுக்கு தமிழிசை பதிலடி!
Tamilisai Soundararajan: பாஜகவின் மதுரை முருகன் மாநாட்டை திமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதற்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாங்கள் (பாஜக) நினைத்தால் இந்தியாவில் எங்கும் மாநாடு நடத்தலாம் எனக் கூறினார். உங்களால் தமிழ்நாட்டில் மட்டும் நடத்த முடியும் என அவர் பதிலடி கொடுத்தார்.

சென்னை, ஜூன் 7: எங்களால் (பாரதிய ஜனதா கட்சி) இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிகழ்ச்சியை நடத்த முடியும். உங்களால் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடத்த முடியும் என திராவிட முன்னேற்ற கழகத்திற்கு (DMK) பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) பதிலடி கொடுத்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரையில் 2025 ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த முருகன் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள், தேசிய பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெறும் முருகன் மாநாடு பணிகள்
வேல் வந்து வினை தீர்க்க
மயில் வந்து வழி காட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்க கண்டேனடிமுருக பக்தர்கள் மாநாடு, ஜூன் 22, 2025
அம்மா திடல், பாண்டிகோவில் அருகில்,
– மதுரை#முருக_பக்தர்கள்_மாநாடு pic.twitter.com/wfFM0EmD8o— H Raja (@HRajaBJP) June 3, 2025




இந்த மாநாடு தொடங்கும் ஆறு நாட்களுக்கு முன்பாக அறுபடை வீடுகளின் மாதிரிகள் அங்கு அமைக்கப்பட்டு அவற்றில் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆறு நாளும் அறுபடை வீடுகளை பார்வையிட வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த முருகன் மாநாட்டை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மதுரையில் நடக்கும் முருகன் மாநாடு சங்கிகளின் மாநாடு என காட்டமாக தெரிவித்து இருந்தார். மக்களை பிளவுபடுத்தக்கூடிய ஆயுதமாக இந்த மாநாட்டை நடத்துகின்றனர் எனவும் கூறினார். திருமாவளவனும் தன் பங்கிற்கு விமர்சித்திருந்தார்.
அமித்ஷா மதுரை வருகை
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2025, ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வர உள்ளார். இதனை முன்னிட்டு இன்று (2025, ஜூன் 7) சென்னையில் இருந்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை தருகிறார்கள். நாங்கள் எல்லோரும் உற்சாகமாக அந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளோம். மதுரை என்றாலே சங்கம் வளர்த்த தமிழ் என சொல்வார்கள். அதனால் நாங்கள் உற்சாகமடைவதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது என நம்புகிறேன்.
ஆனால் திமுகவுக்கு நாங்கள் மதுரையில் கூடினாலே அச்சம் வந்து விடுகிறது. மதுரையை ஆளும் மீனாட்சி எங்களுக்கு அருள் புரிந்து விடுவாள் என்றும், முருகன் அருள் புரிந்து விடுவான் என்றும் பயப்படுகிறார்கள். அதனால்தான் சேகர்பாபு போன்றவர்கள் நாங்கள் பயபக்தியோடு முருகன் மாநாடு நடத்துகிறோம். அவர்கள் பயத்துடன் அந்த மாநாட்டை பார்க்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஆன்மீகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்” என கூறினார்.
எங்களுக்கு இந்தியா.. உங்களுக்கு தமிழ்நாடு
மேலும், திருமாவளவன் கருத்துக்கு பதிலளிக்கும்போது, “ நாங்கள் எப்போதும் முருகனை கும்பிடுபவர்கள் தான். ஆனால் நீங்கள் திமுக கூட்டணி முருகனைப் பற்றி நம்பிக்கை இல்லை என கூறிவிட்டு முருகன் மாநாடு நடத்தியது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் அண்ணன் திருமாவளவன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இது மதவாதம் கிடையாது, மனிதத்துவம். கவலைப்படாதீர்கள் 2026 நீங்கள் ஓய்வு எடுப்பீர்கள்” என தமிழிசை தெரிவித்தார்.
இதனையடுத்து முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறார்கள், உத்திர பிரதேசத்தில் நடத்த வேண்டியதுதானே என கேட்கிறார்களே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், “இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எங்களால் நடத்த முடியும். எங்களுக்கு நிறைய இடங்களில் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு தான் தான் தமிழ்நாட்டைத் தவிர எங்கு நடத்த வாய்ப்பு இல்லை” என தன் ஸ்டைலில் பதிலடி கொடுத்தார்.