பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்.. உயர் நீதிமன்றம் வேதனை!
Chennai HC Condemns Quarry Owners | தமிழகத்தில் கல் குவாரி மோசடிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், உரிமம் முடிந்த பிறகு குவாரியை வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கு ஒன்று இன்று (ஜூன் 07, 2025) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சென்னை, ஜூன் 07 : பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் (Chennai High Court) வேதனை தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன என்பதை விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், குவாரிகள் குறித்து உயர் நீதிமன்றம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குவாரி முறைக்கேடு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
குவாரியை வெட்டி எடுப்பதற்கான உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோயம்புத்தூரை சேர்ந்த குவாரி உரிமையாளர் செந்தாமரை என்பவருக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 07, 2025) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரருக்கு குவாரி நடத்த உரிமை இல்லை என்றும், சட்ட விரோதமான உரிமம் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள் – நீதிமன்றம்
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர். பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியை காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், குவாரி உரிமம் 2023-ல் முடிந்ததால் தற்போது அதனை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலரின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது. குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி பரதசக்ரவர்த்தி இந்த வழக்கில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.