Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Tiruchendur Murugan Temple: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, 2025 ஜூன் 9ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும். ரயில்களின் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர், ஜூன் 7: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசியாக கொண்டாடப்படும். முருகப்பெருமான் அவதார தினமாக அறியப்படும் இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம். இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்று திருவிழாக்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே வைகாசி திருவிழா நாளான 2025 ஜூன் 9ஆம் தேதி நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 9:15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது (06101) காலை 10:50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06102) மதியம் 12.55 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06103) இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் என்றும், மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் (06104) நள்ளிரவு 12:30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் முழுக்க முழுக்க முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டதாகும். வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




திருச்செந்தூருக்கு செல்லும் மற்ற ரயில்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு ரயில் மூலம் செல்ல வேண்டும் என்றால் நாம் திருநெல்வேலி தாண்டித்தான் போக வேண்டிய சூழல் உள்ளது. இதனிடையே சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை தினந்தோறும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்துப் பார்த்தால் திருச்செந்தூருக்கு நேரடி ரயில்கள் என்பது கிடையாது. அதே சமயம் திருச்செந்தூர் முதல் பாலக்காடு வரை தினசரி ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வாஞ்சி மணியாச்சி வரை மற்றொரு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் திருச்செந்தூர் செல்ல வேண்டுமென்றால் திருநெல்வேலிக்கு செல்லும் தென் மாவட்ட ரயில்களில் சென்று அங்கிருந்து பயணம் மேற்கொள்ளலாம். திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 7:15, 10:20,11:40,மதியம் 1.30, மாலை 4:30, இரவு 6:50 ஆகிய மணிகளில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது.