Thanjavur: பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் காலமானார்.. ஊரே திரண்டு வந்து அஞ்சலி!
தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் ரூ.10 கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் பிள்ளை (96) வயது மூப்பால் காலமானார். 1957 முதல் சேவை அளித்த இவர், ஏழைகளின் நண்பராக அறியப்பட்டவர். குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளித்ததற்காக பல சமூக சேவைக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.

தஞ்சாவூர், ஜூன் 7: தஞ்சாவூர் அருகே 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்களிடையே மிகவும் பிரபலமாக திகழ்ந்த மருத்துவர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுச் செய்தி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான நோய் பாதிப்புகளை கண்டறியும் மருத்துவ கண்டுபிடிப்புகளும் வந்து விட்டன. இப்படியான நிலையில் சாதாரண தலைவலி, காய்ச்சல் என மருத்துவமனைக்கு சென்றால் கூட ஷாக்காகும் அளவுக்கு பில் போடுகிறார்கள் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. இப்படியான நிலையில் ஆங்காங்கே குறைந்த விலைக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் ரத்தினம் பிள்ளை.
மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ரத்தினம்பிள்ளை அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும்… pic.twitter.com/gIoZCO2HFR
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 7, 2025




தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் ஏழைகளின் மருத்துவர் என அழைக்கப்பட்டு வந்த இவர் 1957 ஆம் ஆண்டு முதல் முறையாக தனது மருத்துவ பணியை தொடங்கினார். அப்போது ரூ.2 கட்டணம் பெற்றுள்ளார். அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு மருத்துவ கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தியுள்ளார். இதனையடுத்து 2007 ஆம் ஆண்டிலிருந்து மரணிக்கும் வரை ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்று மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர்
பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அழைக்கப்படும் ரத்தினம் பிள்ளை அந்த காலகட்டத்தில் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குறைந்த செலவில் சரி செய்யக்கூடிய திறமை வாய்ந்தவராக திகழ்ந்துள்ளார். அதேபோல் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவ நிகழ்வாக இருந்தாலும் சரி ஆபரேஷன் செய்யாமல் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மிகச்சிறந்த மதிப்பை அப்பகுதி மக்களிடையே பெற்று வந்தார். இவரின் சமூக சேவையை பாராட்டி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேயம் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனர்.
இந்த நிலையில் 96 வயதான டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக இன்று (ஜூன் 7, 2025) இயற்கை எய்தினார். அவரது மறைவு செய்தி கேட்டு உள்ளூரைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டாக்டர் ரத்தினம் பிள்ளையின் இறுதி ஊர்வலமானது 2025 ஜூன் 8ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீனிவாசபுரத்தில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.