போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை..
Drug Abduction Case: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 25 2025 அன்று கிருஷ்ணாவை பிடித்து காவல்துறையினர் இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த்:
பார் மோதல் வழக்கில் காவல் துறையினர் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உட்பட 11 பேரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் பிரசாத்திற்கு அவரது நண்பர் சேலத்தை சேர்ந்த பிரதீப் என்பவரும் ஆப்பிரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரும் போதை பொருள் வழங்கியதாக தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கி விற்பனை செய்து வந்ததாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் நடிகர் ஸ்ரீகாந்திருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை:
நடிகர் ஸ்ரீகாந்த்திடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக கூறியிருந்தார். அதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தன்னை வைத்து படம் எடுத்ததாகவும் பணம் கேட்டபோதெல்லாம் போதை பொருள் கொடுத்ததாகவும் இதுவரை மூன்று முறை போதை பொருள் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் அவரே கேட்டு வாங்கும் நிலைக்கு போதைப் பொருளுக்கு அடிமையானதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகர். கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அவர் கேரளாவில் தலைமுறைவாக இருக்கிறார் அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் , தமிழக காவல்துறையினரால் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 25 2025 தேதியான நேற்று மாலை கிருஷ்ணாவை காவல்துறையினர் பிடித்தனர்.
அவரிடம் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இரவு முழுவதும் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது செல்போனிலிருந்து டேட்டாக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு முதல் அவர்களது நண்பர்களிடம் code word-ல் பேசியதாகவும் இந்த code word என்ன என்பது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்ய நடவடிக்கை:
நடிகர் ஸ்ரீகாந்திற்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை போல் நடிகர் கிருஷ்ணாவிற்கும் ரத்த பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவிற்கு இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.