2026 Tamil Nadu Assembly Elections: தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தேனா..? காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம்!

DMDK-DMK Alliance: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் கூட்டணி உத்திகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேமுதிகவின் கூட்டணி முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

2026 Tamil Nadu Assembly Elections: தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தேனா..? காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம்!

செல்வப்பெருந்தகை - பிரேமலதா

Updated On: 

03 Jun 2025 17:04 PM

சென்னை, ஜூன் 3: தமிழ்நாட்டில் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Elections) பெரும்பான்மையுடன் வெற்றிபெற, அரசியல் கட்சிகள் இப்போதே பல்வேறு வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டன. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) தலைமையிலான அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி வைத்தது. அதேநேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி தொடரும் என அறிவித்திருந்தன.

அதேநேரத்தில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு, செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை விளக்கம்:

தேமுதிகவை இந்தியா கூட்டணிக்கு அழைத்தேனா என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்தியா கூட்டணியில் சேரும்படி தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நான் அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. கூட்டணிக்குள் யாரை அழைக்க வேண்டும், வரவேற்க வேண்டும் என்பதை எல்லாம் தமிழ்நாட்டை பொறுத்தவரை மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே முடிவு செய்வார். அவர் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் காங்கிரஸ் தனது முழு ஆதரவை கொடுக்கும். அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். அவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் வரவேற்போம்” என தெரிவித்திருந்தார்.

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு..?

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொறுத்தவரை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அதற்கு காரணம், வருகின்ற மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிக்கு ஒரு சீட்டை ஒதுக்குவதாக அறிவித்திருந்தது. மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிக தொடரும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, வருகின்ற 2026ம் ஆண்டு தொடக்கத்தில்தான்  சட்டமன்றத் தேர்தல்களுக்கான கூட்டணி குறித்து தேமுதிக கட்சித் தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தார்.