சென்னை: சில நிமிட நடைப்பயிற்சி… திடீரென உயிரிழந்த பள்ளி மாணவி…
Student Death: சென்னையில் நடைப்பயிற்சியின்போது மயங்கிய 14 வயது மாணவி உயிரிழப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.தலைவலி மற்றும் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரிப்படம்
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது மாணவி நடைப்பயிற்சியின்போது திடீரென மயங்கி விழுந்தார். அவர் சமீபத்தில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவலி ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்குள் வாந்தி எடுத்ததால் நிலைமை மோசமடைந்தது. மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பள்ளி மாணவியின் பின்னணி
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஹர்ஷிதா என்பவர் தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட இவர், பள்ளியின் அத்லெடிக்ஸ் அணியில் உறுப்பினராக இருந்து சிறப்பாக பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு திறன்களில் முன்னேற்றம் காணும் நோக்கில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
குத்துச்சண்டை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி
இவர் சமீபத்தில் குத்துச்சண்டை கற்றுக் கொள்வதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள “போக்கஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி” என்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த மூன்று நாட்களாக பயிற்சி பெற்று வந்தார். உடல் உறுதியை மேம்படுத்தும் நோக்கில் அதிகாலை நேரங்களில் நடை பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை தனது அண்ணனுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுக் கொண்டிருந்த போது திடீரென சிறுமிக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அச்சம் அடைந்த அவரது அண்ணன், தாமதிக்காமல் இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, சிறுமி திடீரென வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
மேல்சிகிச்சைக்கு மாற்றம் மற்றும் மரணம்
அதனைத் தொடர்ந்து சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் குடும்பத்தினரையும் சுற்றத்தினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போலீஸ் விசாரணை தொடக்கம்
இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் திடீர் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே தெளிவான தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் சென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.