Cricket retirements 2025: 35 நாட்களுக்குள்! 5 தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!
Top 5 Cricketers Retire in 35 Days: கடந்த 35 நாட்களில் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சி! ரோஹித் சர்மா, விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசன், க்ளென் மேக்ஸ்வெல் போன்ற 5 முன்னணி வீரர்கள் வெவ்வேறு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். ரோஹித், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், பூரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தனர்.

நிக்கோலஸ் பூரன் - விராட் கோலி - ரோஹித் சர்மா - க்ளென் மேக்ஸ்வெல் - ஹென்ரிச் கிளாசன்
கடந்த 35 நாட்களில் யாருக்கு என்ன நடந்ததோ தெரியாது, ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மோசமான நாளாகவே அமைந்தது. அதற்கு காரணம், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் (Cricket) வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். அதாவது, கடந்த 35 நாட்களில் உலக கிரிக்கெட்டில் 5 சிறந்த வீரர்கள் வெவ்வேறு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை வெளியிட்டனர். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல வீரர்கள் ஆவர். சில கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு (Cricket retirements 2025) பெற்ற நிலையில், ஒரு சிலர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினர். இந்தநிலையில், எந்தெந்த கிரிக்கெட் வீரர்கள், எந்தெந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
நிக்கோலஸ் பூரன்:
2025 ஜூன் 10ம் தேதியான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டனான பூரன், ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். நிக்கோலஸ் பூரன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 61 டி20 போட்டிகள் மற்றும் 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
ரோஹித் மற்றும் கோலி:
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த 2025 மே 7ம் தேதி ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 4,301 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் சில நாட்களுக்குப் பிறகு, விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளுக்கு விடைபெற்றார். இந்திய அணிக்காக கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் உட்பட 9230 ரன்கள் எடுத்துள்ளார். இப்போது இவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட இருக்கின்றனர்.
கிளாசன்:
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன், 2025 ஜூன் மாத தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 33 வயதான கிளாசன் தனது வாழ்க்கையில் 60 ஒருநாள் போட்டிகளிலும் 58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
க்ளென் மேக்ஸ்வெல்:
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும் தனது 36 வயதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேக்ஸ்வெல் தனது வாழ்க்கையில் 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களுடன் 3,990 ரன்கள் எடுத்துள்ளார்.