‘அப்பா இல்லன்னா நான் இல்லை’ – தந்தை குறித்து உருக்கமாக பேசிய ரோஹித் சர்மா
Rohit Sharma About Father : ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஷாக் அவரது தந்தையையும் பாதித்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தை குறித்தும், அவரது தியாகங்கள் குறித்தும் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இந்த முடிவை எடுத்த ரோஹித், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு அவர் சிறந்த ஃபார்மில் இல்லாவிட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாக அவர் வெளிப்படுத்தியிருந்தார், ஆனால் அவரது ஓய்வு செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
டெஸ்ட் போட்டிகளில் தனது விளையாட்டை தொடருவேன் என்று முன்னர் கூறிய ரோஹித், ரஞ்சி டிராபியில் போட்டியிடுவதன் மூலம் கிரிக்கெட்டை கைவிடவில்லை என்பதையும் காட்டினார். இருப்பினும், இறுதியாக தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினார்
அப்பா குறித்து உருக்கம்
இந்த முடிவு ரோஹித்தின் தந்தையையும் பெருமளவில் ஏமாற்றமடையச் செய்துள்ளது மும்பையில் நடந்த சேதேஷ்வர் புஜாராவின் ‘தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரோஹித் சர்மா தன்னுடைய தந்தை குறித்து பேசினார். அதில், “என் தந்தை ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்தார். எங்கள் குடும்ப வாழ்க்கைக்காக அவர் நிறைய தியாகங்களைச் செய்தார். ஆனால் அவர் முதல் நாளிலிருந்தே டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகராகவே இருந்தார்.
அவருக்கு இந்த புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்கவில்லை . டி20 மற்றும் பிரான்சைஸ் லீக்குகள் மீது அவருக்கு பெரிய விருப்பம் இல்லை. நான் ஒருநாள் போட்டிகளில் 264 ரன்கள் எடுத்தபோதும், அவர் எதையுமே கண்டுகொள்ளவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எனது 30, 40, 50 ரன்கள் குறித்து அவர் நீண்ட நேரம் விவாதிப்பார். அதுதான் அவரது அன்பு,” என்றார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது தனது தந்தை சற்று ஏமாற்றமடைந்ததாக ரோஹித் கூறினார். “அவர் எனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பள்ளி கிரிக்கெட்டில் இருந்து இந்தியா ஏ வரை என்னைப் பார்த்திருக்கிறார். நான் ரஞ்சி, துலீப் மற்றும் இரானி கோப்பைகளை விளையாடியுள்ளேன். அதனால்தான் அவரது ஆதரவு விலைமதிப்பற்றது. நான் இன்று இங்கே இருந்தால், என் தந்தையின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரது ஆதரவு இல்லாமல், இது சாத்தியமில்லை,” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
அப்பா குறித்து பேசிய ரோஹித்
Rohit Sharma share his father reaction on his retirement from test cricket. pic.twitter.com/RKWXwfMbrX
— Shivraj Shinde (@Shivraj8767) June 6, 2025
டெஸ்ட் வாழ்க்கை
ரோஹித் சர்மா தனது டெஸ்ட் வாழ்க்கையை 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் முடித்தார். 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அவர் வழிநடத்திய போதிலும், இந்தியாவால் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் பங்களிப்புகள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்