Nehal Wadhera: பஞ்சாப் தோல்விக்கு காரணம் நான்தான்.. புலம்பி தள்ளிய நேஹல் வதேரா!

Punjab Kings IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு நேஹல் வதேரா தன்னை குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது மெதுவான ஆட்டத்தால் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும், சிறப்பாக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சீசன் முழுவதும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nehal Wadhera: பஞ்சாப் தோல்விக்கு காரணம் நான்தான்.. புலம்பி தள்ளிய நேஹல் வதேரா!

நேஹல் வதேரா

Published: 

11 Jun 2025 18:53 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியின் 24 வயதான நேஹல் வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். 5வது இடத்தில் களமிறங்கிய வதேராவை, பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆட்டமிழக்க செய்தார். இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்விக்கு நான்தான் காரணம் வதேரா தன்னைத்தானே குற்றம் சாட்டியுள்ளார்.

நேஹல் வதேரா புலம்பல்:


ஹிந்துஸ்தான் டைம்ஸூக்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் பிட்ச் மாறிவிட்டதா என்று நேஹல் வதேராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த, வதேரா, “நான் என்னை முழுவதுமாக குறை கூறி கொள்கிறேன். அந்த நேரத்தில் நான் சிறப்பாக விளையாடியிருந்தால், நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க முடியும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் எடுத்ததால், பிட்ச்சை நான் குறை சொல்ல மாட்டேன். நான் ஆட்டத்தை மெதுவாக எடுத்துக்கொண்டேன் என்று நினைக்கிறேன். போட்டியை முடிக்க முடியாத நாட்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “போட்டியில் வேகத்தை அதிகரிக்க வேண்டிய போதெல்லாம், மெதுவாக எடுத்து சென்று போட்டியை முடிப்பேன். கடைசி ஆட்டத்தை தவிர, நான் மற்ற போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டேன். சில நாட்களில் இது கிளிக் ஆகாது. அதேபோல், இறுதிப்போட்டியிலும் இது நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்ததால், சூழ்நிலைக்கு ஏற்ப அப்படி செயல்பட வேண்டியாக இருந்தது. ஆனாலும், நான் கொஞ்சம் வேகமாக விளையாடியிருக்கலாம் என்றே நினைக்கிறேன், அதை நான் கற்றுக்கொண்டு பகுப்பாய்வு செய்துள்ளேன். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்கவிடமாட்டேன். இது எனக்கும் அணிக்கும் உதவும்.” என்றார்.

ஐபிஎல் 2025 சீசனில் நேஹல் வதேரா எப்படி..?

இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனின் இறுதிப்போட்டியை தவிர, நேஹல் வதேரா அந்த சீசன் முழுவதும் சிறப்பாகவே பேட்டிங் செய்திருந்தார். அந்த சீசனில் இதுவரை 16 போட்டிகளில் 2 அரைசதங்கள் உள்பட 369 ரன்கள் எடுத்தார். அதேபோல், 18வது சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார்.