IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் இவர் இடம் கன்ஃபார்ம்!

Karun Nair: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயர் இடம் பெற வாய்ப்பு அதிகம் என தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பின் அவர் அணியில் இணைந்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் தேர்வாகியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் இவர் இடம் கன்ஃபார்ம்!

சுப்மன் கில், கௌதம் காம்பீர், கருண் நாயர்

Updated On: 

06 Jun 2025 14:36 PM

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடர் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2025, மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்கள் ஓய்வை அறிவித்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின் இளம் வீரரான சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாக பிசிசிஐ தேர்வு செய்தது. அவர் தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் (Gautham Gambhir) சில தகவல்களை 2025, ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

7 ஆண்டுகளுக்குப் பின் அணியில் கருண் நாயர்


அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் கருண் நாயர் (Karun Nair) கண்டிப்பாக அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக காம்பீர் தெரிவித்துள்ளார். கரும் நாயர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடினார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாட நிலையில் மீண்டும் அணியில் இடம்பெற்றது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது. இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருவதால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது அனுபவம் இங்கிலாந்து மைதானங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிக்கும் என காம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ள கருண் நாயர், தற்போது நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடி இரட்டை சதமும் அடித்துள்ளார். இப்படியான நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அணியில் இருப்பது சிறந்தது என காம்பீர் தெரிவித்துள்ளார். நிச்சயமாக கருண் நாயர் சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன் எனக் கூறிய அவர், ஒன்று, இரண்டு டெஸ்ட் போட்டிகளை வைத்து ஒருவரை மதிப்பிட மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி 2025 ஜூன் 20 தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது. ஏற்கனவே 2019- 2021 மற்றும் 2021 – 2023 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியை தழுவியது. இப்படியான நிலையில் 2023 முதல் 2025 வரை நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.