தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!
Thai Amavasya 2026: இளைஞர்கள் "ஏன் செய்வது? எதற்கு செய்வது?" என்று கேட்காமல் இதன் ஆழத்தையும் மரபையும் புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தினம் சிறிய அளவாது அன்னதானம் செய்ய மறந்து விடாதீர்கள். நூறு பேருக்கு கொடுக்க முடியாவிட்டாலும் ஒருவருக்கு கொடுத்தாலும் போதும்.
தை மாதம் தேவர்களுக்கு விடியற்காலம் எனக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் தேவர்களின் காலை நேரம்; அதன்பின் வரும் தைமாதம் தேவர்களின் விடியற்காலத்தைக் குறிக்கும். இந்த விடியற்காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசைக்கு மிகச் சிறப்பு உண்டு. முன்னோர்களுக்கான தர்ப்பணம் எப்போதுமே சூரிய உதயத்திற்குப் பிறகே செய்ய வேண்டும் என்பது மரபு. ஆதித்ய பகவானை சாட்சியாக வைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதால் பிரம்ம முகூர்த்தத்தில் அல்ல, சூரிய உதயத்திற்கு பிறகே வழிபாடு தொடங்க வேண்டும். நாம் இன்று வாழ்கிறோம், முன்னேறுகிறோம் என்பதை நம்மைப் பிறப்பித்த முன்னோர்களின் காரணமாகத்தான் பெரியவர்கள் கூறியுள்ளனர். ஆன்மா அடுத்த பிறவி எடுத்துவிட்டதா என நமக்குத் தெரியாது. அவர்கள் எங்கு இருக்கின்றனர் எனவும் தெரியாது. எனவே மனதார, அன்போடு அவர்கள் நலம் பெற வேண்டி வழிப்பாடு செய்வதே சந்ததிகளின் கடமை.
Also Read : 2026 ஜனவரி மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு உருவாகும் ராஜயோகம்.. அடிக்குது அதிர்ஷ்டம்..
யார் என்ன செய்ய வேண்டும்?
அப்பா உயிரோடிருக்கிறார் என்றால் மகன் தர்ப்பணம் செய்ய அவசியம் இல்லை. அப்பா உயிருடன் இல்லை – மகன் தர்ப்பணம் செய்யலாம். தாயார் இல்லை என்றால், அப்பா மகன் சேர்ந்து தாயாருக்குச் செய்யலாம். பெண்கள் தங்களது தந்தைக்கு கணவர் உயிரோடிருக்கும் வரை தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆனால், காகத்திற்கு உணவளிக்கலாம். தற்கொலை செய்யப்பட்டவர்களுக்கு தர்ப்பணம் கிடையாது. அவர்களுக்காக காகத்திற்கு சாப்பாடு வைக்கலாம், தானம் செய்யலாம்.
எங்கு செய்ய வேண்டும்?
நதிகள், கடல்கள், ஏரிகள் தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாகும். அந்த இடங்களுக்கு போக முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம். இயலாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக எள்ளு, தண்ணீர் கொண்டு தாம்பாளத்தில் தர்ப்பணம் செய்யலாம். காசி, கயா ஆகிய புண்ணிய தலங்களை மனதில் நினைத்துக்கொண்டு, சூரியனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் அந்த நீரை மனிதர்கள் காலடி படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.
முன்னோர்களின் படம் இருந்தாலும், இல்லை என்றாலும் முன்னோர்களை நினைத்து இலையில் உணவு வைக்க வேண்டும். மாலை நேரத்தில் வேறொரு விளக்கில் பஞ்சுத்திரி, நல்லெண்ணை வைத்து ஒரு மணி நேரம் தீபம் ஏற்றி முன்னோர் நலத்துக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
Also Read : போகி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் – ஆன்மிக பெரியவர்கள் சொல்வது என்ன?
மூன்றில் ஒன்றாவது செய்யுங்கள்:
இந்த மூன்று விஷயங்களில் குறைந்தபட்சம் ஒன்றாவது செய்யுங்கள். அதாவது, காலையில் தர்ப்பணம் கொடுப்பது, மதியம் படையல் வைத்து பூஜை செய்வது, மாலை விளக்கு வைத்து பூஜை செய்வது. அப்படிச் செய்தால் நம் முன்னோர் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.
தை அமாவாசையில் ஒருவருக்கு உணவு, துணி, தேவைக்கேற்ற பொருள். இதில் ஏதாவது ஒன்று வாங்கி கொடுத்தால் பெரிய புண்ணியம் கிடைக்கும்.