சித்ரா பௌர்ணமி.. லட்சுமி தேவியை இப்படி வழிபட்டால் புண்ணியம் கிட்டும்!
சித்ரா பௌர்ணமி 2025 மே 12 அன்று வருகிறது. இந்து சமயத்தில் மிக முக்கியமான இந்த நாளில், லட்சுமி தேவி வழிபாடு, தான தர்மங்கள் செய்வது மிகுந்த பலனளிக்கும். வெள்ளை இனிப்புகள், பாயசம், தேங்காய், தாமரை மலர் போன்றவற்றை லட்சுமிக்கு காணிக்கையாகப் படைக்கலாம்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை அமாவாசை, பௌர்ணமிக்கு என ஒரு சிறப்பு உள்ளது. மாதந்தோறும் இவை வந்தாலும் ஆண்டுக்கு குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் திதிகள் சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் பௌர்ணமி நிலவுக்கு முக்கியத்துவம் சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் அருகிலுள்ள நீர் நிலைகளில் நீராடி, அன்னதானம் செய்வது மிகுந்த பலன்களைத் தரும் என்று ஐதீகமாக உள்ளது. இந்து மதத்தைப் பொறுத்தவரை சித்திரை மாதம் வரும் பௌர்ணமி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் விஷ்ணு வழிபாடு மேற்கொண்டு தான தர்மங்கள் செய்வதால் மிகப்பெரிய பலன்கள் உண்டாகும் என நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 12ஆம் தேதி வருகிறது. இந்நாளில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி காணலாம்.
பொதுவாக சாஸ்திரத்தின் படி பௌர்ணமி நாளில் நாம் செல்வத்தின் அதிபதியாக திகழும் லட்சுமி தேவியை வழிபடும் ஒரு பாரம்பரியம் இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே உள்ளது. லட்சுமி தேவியை வழிபடுவதால் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது. அத்தகைய நிலையில் மிகவும் சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி நாளில், யார் ஒருவர் தனக்குப் பிடித்தமான பொருட்களை லட்சுமி தேவிக்கு காணிக்கையாக வழங்கி வழிபடுகிறாரோ அவர்களுக்கு அவளின் ஆசிகள் முழுவதுமாக கிடைக்கும் என்றும், வீட்டில் செல்வத்திற்கும் உணவுக்கும் ஒருபோதும் பற்றாக்குறை ஏற்படாது எனவும் நம்பப்படுகிறது.
லட்சுமி தேவிக்கு என்ன படைக்கலாம்?
சித்திரை மாத பௌர்ணமி நாளில் லட்சுமி தேவிக்கு வெள்ளை நிறத்திலான இனிப்புகளை படைத்து வழிபடலாம். இது லட்சுமி தேவிக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி அவளின் ஆசீர்வாதத்தைப் பெற்று தரும் என நம்பப்படுகிறது. மேலும் இந்நாளில் பூஜை வழிபாட்டில் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த பாயசத்தை வைத்து வணங்கினால் தீராத நோயெல்லாம் தீரும் என சொல்லப்பட்டுள்ளது. வெள்ளை இனிப்புகளுக்கு பதிலாக பால்கோவாவை நைவேத்யம் செய்யலாம்.
சித்ரா பௌர்ணமி தினத்தில் செல்வத்தின் அதிபதியாக திகழும் லட்சுமி தேவிக்கு மற்ற விஷயங்கள் செய்ய முடியாவிட்டால் ஒரு தேங்காயை காணிக்கையாக செலுத்தலாம். இது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.மேலும் தாமரை மலர் லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானது. எனவே இந்நாளில் லட்சுமி தேவிக்கு தாமரை மலரை வைத்து வழிபட ஒருபோதும் மறக்காதீர்கள்.
சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவம்
சித்ரா பௌர்ணமி அன்று கங்கை நதியில் நீராடுவது மிகுந்த புண்ணியம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கு செல்ல முடியாதவர்கள் பிற நதிகளில் நீராடி அந்நாளில் தானம் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. சித்திரை பௌர்ணமியில் ஆடைகள், பணம், உணவு தானியங்கள் மற்றும் பழங்களை தானம் செய்வது செல்வத்தையும் செழிப்பையும் தரும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்நாள் வட இந்தியாவில் புத்த பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் கௌதம புத்தர் பிறந்ததாகக் கூறப்படுகிறது.
(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)