உங்கள் வீட்டில் செல்வம் செழிக்க.. தை முதல் நாள் வாங்க வேண்டிய மங்களப் பொருட்களும்.. ஆன்மிக விளக்கமும்!!
2026 Thai Pongal: தை முதல் நாள் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் ஆழமான அர்த்தமும், ஆன்மிக காரணமும் உள்ளது. அதனால், மங்களப் பொருட்கள் வாங்குதல் முறையாக வீட்டிற்குள் கொண்டு வருதல், தர்மம் செய்தல், இவை அனைத்தையும் ஒரு சம்பிரதாயமாக அல்லாமல், ஒரு உணர்வோடு பின்பற்றினால், வாழ்க்கையில் நிச்சயம் நன்மை உண்டாகும்.
தை முதல் நாளில் வாங்க வேண்டிய மங்களப் பொருட்கள் என்ன? அவற்றை எப்போது, எப்படி வாங்க வேண்டும்? என்பதற்கான ஆன்மிக விளக்கத்தை பார்க்கலாம். பொதுவாக தை மாதம் தொடங்கும் நாளில், அதாவது தை முதல் நாளில், வீட்டிற்குள் முதலில் கொண்டு வர வேண்டியவை மங்களப் பொருட்களே ஆகும். இந்த மரபு புதிதானது அல்ல; பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கமே. அதனால்தான், “தை பிறந்தவுடன் முதலில் வாங்க வேண்டியது மங்களப் பொருள்” என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
Also Read : சிவபெருமானுக்கு எதிரில் நந்தி இருப்பது ஏன்? காதில் வேண்டுதல்களை சொல்வது ஏன்?
தை முதல் நாளில் கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள்:
மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு, பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள் – குங்குமம், இதில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை ஆகும். தை முதல் நாள் விடியற்காலையில், குளித்து சுத்தமாக இருந்து இந்த மங்களப் பொருட்களை வாங்கி வீட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் சிறப்பானதாகும்.
இந்த பொருட்களை வாங்குவதற்கு தை முதல் நாள் காலையில் நேரம் இல்லை என்றால், முந்தைய நாள் இரவில் வாங்கலாம். ஆனால் வீட்டிற்குள் கொண்டு வராமல், மாடி, வீட்டிற்கு வெளியே, வராண்டா அல்லது ஷெட் போன்ற இடத்தில் வைத்துக்கொள்ளலாம். தை முதல் நாள் காலை குளித்து முடித்த பிறகு மட்டுமே வீட்டிற்குள் இந்த பொருட்களை கொண்டு வர வேண்டும்.
மண்பானை குறித்து குறிப்பு:
சில குடும்பங்களில் மண்பானை (மண் பாத்திரம்) பயன்படுத்தும் வழக்கம் இருக்கும். அந்த மண்பானையை மட்டும் முன்கூட்டியே வாங்கிக் கொள்ளலாம். மற்ற மங்களப் பொருட்கள் அனைத்தும் தை முதல் நாளிலேயே வாங்கப்பட வேண்டும்.
கரும்பின் ஆன்மிக அர்த்தம்:
கரும்பு வெறும் இனிப்புக்காக மட்டுமல்ல. கரும்பு வளர்ச்சியின் அடையாளம். ஒரு கரும்பில் பல கணுக்கள் (முட்டுகள்) இருக்கும். அந்த கணுவில் இருந்து மற்றொரு கரும்பு உருவாகும். இதன் பொருள் என்னவென்றால், குடும்ப வளர்ச்சி, சந்ததி பெருக்கம், செல்வ வளர்ச்சி, முன்னொரு காலத்தில் கரும்பின் ஒரு பகுதியை வீட்டில் அல்லது தோட்டத்தில் நட்டு, அது வளர்ந்தால் அடுத்த பொங்கலுக்கு பயன்படுத்துவார்கள். இன்றும் இயன்றால், மாடியில் அல்லது தோட்டத்தில் ஒரு நினைவுச் சின்னமாக கூட நட்டு வைக்கலாம்.
தை முதல் நாள் தர்மம் அவசியம்:
பொங்கல் என்பது வெறும் பூஜை மட்டுமல்ல, சூரியனுக்கு படைப்பது. விவசாயம் செழிக்க வேண்டுவது, தர்மம் செய்வது – இதுவே முழுமையான பொங்கல் ஆகும். அதனால்தான் குழந்தைகள், பெரியவர்கள், வேலை செய்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பொங்கல் கொடுத்து, சிலர் பணமும் வழங்குவார்கள். தை முதல் நாள் செய்யும் தர்மம், ஆண்டு முழுவதும் வளர்ச்சியை தரும் என்பது நம்பிக்கை.
Also Read: வீட்டில் வாழை மரம் இருக்கா? இந்த வாஸ்து விஷயங்களை கவனிங்க!
ஒவ்வொரு செயலுக்கும் ஆழமான அர்த்தம்:
தை முதல் நாள் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் ஆழமான அர்த்தமும், ஆன்மிக காரணமும் உள்ளது. அதனால், மங்களப் பொருட்கள் வாங்குதல் முறையாக வீட்டிற்குள் கொண்டு வருதல், தர்மம் செய்தல், இவை அனைத்தையும் ஒரு சம்பிரதாயமாக அல்லாமல், ஒரு உணர்வோடு பின்பற்றினால், வாழ்க்கையில் நிச்சயம் நன்மை உண்டாகும்.