சபரிமலை போறீங்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..

Sabarimala: சபரிமலை வேண்டுதல் என்பது ஒரு சாதாரண யாத்திரை அல்ல. இது மனத்தையும் உடலையும் சுத்திகரிக்கும் ஆன்மீகப் பயணமாகும். தன்னடக்கமும் தெய்வநம்பிக்கையும் வளர்க்கும் வழி இது. எல்லோரும் சமம், எல்லோரும் சுவாமி என்ற தத்துவத்தை உணர்த்தும் இதன் மூலம் மனிதனில் அமைதி, தாழ்மை, ஒற்றுமையை வளர்க்கும் புனிதப் பாதையாக சபரிமலை வேண்டுதல் விளங்குகிறது.

சபரிமலை போறீங்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..

சபரிமலை கோவில்

Updated On: 

12 Nov 2025 14:42 PM

 IST

சபரிமலை என்பது கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள பிரபலமான ஐயப்பன் கோயில் ஆகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற மந்திரத்தை உச்சரித்து, பக்தி பூர்வமாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த யாத்திரையின் முக்கியம் வேண்டுதல் அல்லது மண்டல விரதம் ஆகும். இது ஒரு ஆன்மீக ஒழுக்கப் பயிற்சியாகக் கருதப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் முன் பக்தர்கள் முதலில் ஒரு குருவின் (ஆசான்) வழிகாட்டுதலின் கீழ் மாலை அணிவது வழக்கம். மாலை அணியும் போது “சுவாமியே சரணம் ஐயப்பா” எனச் சொல்லி, ஐயப்பன் அருளை நாடி விரதம் தொடங்கப்படுகிறது. இந்த விரதம் மொத்தம் 41 நாட்கள் நீடிக்கும். இந்நாட்களில் பக்தர்கள் தங்கள் உடல், மனம், மற்றும் சொற்களில் முழுமையான கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்.

Also Read : வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை வைத்திருக்கலாமா? வாஸ்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

காலை, மாலை வழிபாடு:

இந்த மண்டல விரதத்தின் போது பக்தர்கள் கருப்பு அல்லது நீல வஸ்திரம் அணிவர். அவர்கள் பிரம்மச்சரியத்தில் இருப்பர்; அதாவது, தன்னை முழுமையாக தெய்வத்திற்கே அர்ப்பணித்து வாழ்வர். உணவில் சைவ உணவு மட்டுமே உட்கொள்வர். புகை, மதுபானம், மாமிசம், பொய், கோபம், சண்டை ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலையில் குளித்து, பூஜை செய்து, மாலை வேளையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

பக்தர்கள் தங்களை எளிமையாக நடத்திக் கொள்ள வேண்டும். செருப்பு அணியாமல் காலால் நடப்பது வழக்கம்; இது தாழ்மையையும் துன்ப சகிப்புத்தன்மையையும் கற்றுக்கொடுக்கிறது. எங்கு சென்றாலும் ஒவ்வொருவரையும் “சுவாமி” என்று அழைப்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் குறிக்கிறது.

இருமுடி எனப்படும் புனிதப் பை:

விரதம் முடிந்த பின் பக்தர்கள் இருமுடி எனப்படும் புனிதப் பையை தயாரிக்கின்றனர். இந்த இருமுடி இரண்டு பகுதிகளாக இருக்கும், முன் முடி – ஐயப்பனுக்காக அர்ப்பணிக்கப்படும் பொருட்கள் (நெய் நிரப்பிய தேங்காய், அரிசி, பூஜைச் சம்மான்). பின் முடி – பயணத்துக்குத் தேவையான பொருட்கள் (உணவு, துணி முதலியவை).

பயணம் தொடங்குவதற்கு முன் பக்தர்கள் பம்பா நதியில் நீராட வேண்டும். பம்பா நீராட்டு ஆன்மீக சுத்திகரிப்பை குறிக்கிறது. அதன் பிறகு பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” எனச் சொல்லி, மலை ஏறத் தொடங்குகிறார்கள். பாதையில் காடுகள், குன்றுகள், இயற்கையின் அமைதி ஆகியவை பக்தருக்கு மன சாந்தியையும் தியான நிலையும் தருகின்றன.

Also read: ராஜ யோகம் 2025: துலாத்தில் சுக்கிரன் சூரியன் சேர்க்கை.. 5 ராசிக்கு அதிர்ஷ்ட பலன்கள்!

பதினெட்டு படிகள்:

மலையின் உச்சியில் இருக்கும் ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு முக்தி நிலையைக் குறிக்கிறது. கோயிலின் முன் இருக்கும் பதினெட்டு படிகள் ஐயப்பன் தத்துவத்தின் அடையாளமாகும். ஒவ்வொரு படியும் ஒரு மனிதன் கடக்க வேண்டிய பாவம், குணம், உணர்ச்சி போன்றவற்றை குறிக்கிறது. இந்த படிகளை “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று கூறி ஏறும் போது, பக்தர் தன்னுள் உள்ள அசுத்தங்களையும் அகற்றி, தெய்வீக ஒளிக்குச் சென்று சேர்கிறார்.