AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadi Tuesday: ஆடி மாத கடைசி செவ்வாயும், குங்கும அர்ச்சனை வழிபாடும்!

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். குழந்தைகளுக்கான கன்னிகா பூஜை, சுமங்கலிப் பெண்களுக்கு விருந்தளித்தல், குங்கும அர்ச்சனை போன்றவற்றைச் செய்வதன் மூலம் குடும்பத்தில் செல்வம், மகிழ்ச்சி பெருகும் என நம்பப்படுகிறது. அம்மனுக்குரிய மந்திரங்கள், பாடல்களைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்வது பற்றிப் பார்க்கலாம்.

Aadi Tuesday: ஆடி மாத கடைசி செவ்வாயும், குங்கும அர்ச்சனை வழிபாடும்!
ஆடி மாத கடைசி செவ்வாய் வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Aug 2025 12:57 PM IST

ஆடி மாதம் ஆன்மீகத்தில் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெண் தெய்வங்களின் சக்தி மிக அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் சுப காரியங்கள் தள்ளி வைக்கப்பட்டு முழுக்க இறையருள் நிறைந்து இருக்க வேண்டும் என்பதால் ஆடி மாதம் மிகவும் விசேஷமாக உள்ளது. இந்த ஆடி மாதத்தில் அனைத்து நாட்களும் ஏதேனும் ஒரு சிறப்பான நிகழ்வுடன் அமையும். அதாவது ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடித்தபசு என ஏராளமான விசேஷ தினங்கள் இந்த நாட்களில் வருகிறது. இப்படியான நிலையில் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரும் நிலையில் அந்நாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் பற்றி காணலாம்.

ஆடி கடைசி செவ்வாய் வழிபாடு

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாயில் வீட்டில் சிறு குழந்தைகளுக்கு கன்னிகா பூஜை செய்வது குடும்பத்திற்கு நல்லதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நாளில் வீட்டில் சுமங்கலி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து தாம்பூலத்தில் மங்களப் பொருட்களை வைத்து வழங்குவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் மங்கள கௌரி விரதம் பெண்களால் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மனதிற்கு ஏற்ற நல்ல கணவர் அமைவார். திருமணம் ஆன பெண்களாக இருந்தால் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Also Read: Aadi Tuesday: பலன்களை அள்ளித்தரும் ஆடி செவ்வாய்.. விரதம் இருப்பது எப்படி?

குங்கும அர்ச்சனை

மேலும் இந்நாளில் நாம் விரதம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அம்மனை வணங்கினால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. அதேபோல் இந்நாளில் அம்மனுக்கு உரிய மந்திரங்கள், பாடல்கள் ஆகியவை சொல்லி குங்கும அர்ச்சனை செய்யலாம். அதாவது முதலில் அம்மனின் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும்.  பின்பு அபயகஸ்தம் காட்டும் கைகளில் குங்குமம் வைக்க வேண்டும். தொடர்ந்து அம்மனின் திருப்பாதத்தில் வைக்க வேண்டும்.

Also Read: கண் தொடர்பான பிரச்னையை தீர்க்கும் கண்ணுடைய நாயகி அம்மன்!

இதனை வைக்கும்போதெல்லாம் அம்மனுக்குரிய திருமந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் தீப தூபங்கள், கற்பூர ஆரத்தி  ஆகியவை காட்டி குங்கும அர்ச்சனை வழிபாட்டினை நிறைவு செய்யலாம். பின்னர் அந்த குங்குமத்தை நாமும், வீட்டில் உள்ளவர்களும் வைத்துக் கொண்டால் பல்வேறு தடைகள் நீங்கும் என சொல்லப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us